Friday, March 8, 2013

சகஜ மார்க்கத்தை அறிந்து கொள்வீர்..6


  1. நிலைபேறுடைய மெய்மையோடு கொள்கின்ற இணக்கமே பக்தி எனப்படுகிறது.
  2. கோபம் எனும் கொடிய நோயிலிருந்து ஒருவர் விடுபடாதவரை சமநிலைத் தன்மையை அவரால் எட்டவே முடியாது.
  3. மனதை சமநிலைப்படுத்துவதே உண்மையான சாதனா.
  4. மாஸ்டரிடம் அன்பு ஏற்படும்போதுதான் உண்மையான வளர்ச்சி ஏற்படுகிறது.
  5. மாஸ்டருக்குப் பணிந்து நீ ஒன்றைச் செய்யும்போது அது தோல்வி அடைய முடியாது.
  6. சுத்திகரிப்பு உடல் ஆரோக்கியத்தில் எந்த விளைவினையும் ஏற்படுத்தாது. ஆனால் வாழ்க்கைத் தன்மை மாற்றம் கொள்ளும்.
  7. நீ உடலிலும், உடல் சுகத்திலும் கட்டுண்டு கிடக்கும் வரை துன்பம் தவிர்க்க முடியாதது.
  8. சுத்திகரிப்பு இல்லையெனில் ஆன்மீகப் பயணமும் இல்லை.
  9. அன்பும் சமர்ப்பணமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்; எங்கு அன்பு இல்லையோ,அங்கு சமர்ப்பணம் இருக்க முடியாது
  10. உயர்ந்த நிலைகளை அடைவதற்கு ஆன்மீகப் பயிற்சியில் பிராணாஹீதியைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை.
  11. நாம் அன்பாக உருவாகிடும்போது,அதனுடைய தாக்கத்தின் எல்லையில் வருவதனைத்தும் அந்த அன்பினைப் பெறுகிறது, அந்த அன்பினை உணர்கிறது, அந்த அன்பினை உள்வாங்குகிறது, அந்த அன்பினால் எழுச்சியுறுகிறது.
  12. நமது கழிந்த காலச்சுமையே நம்மை அழுத்திக் கீழே தள்ளுகிறது.அதனுடைய தாக்கத்திலிருந்து உன்னால் விடுபடமுடியுமெனில், மலைகள் கூட மண்ணிலிருந்து உயரே பறக்கும்.
  13. அன்பு என்பது வளர்ந்து,அது ஆட்சி செய்யும் போது அதனுடைய வரம்பினுக்குள் வரும் அனைத்தையும் அது ஆரத்தழுவ வேண்டும்.
  14. சுத்திகரிப்பு.என்பது ஏதோ குப்பைகளிலிருந்து விடுபடுவது அல்ல. சுத்திகரிப்பு நம்மை பாரமற்றதாக்குகிறது. ஆன்மாவும் ஜீவிதமும் சுமையில் இருந்து விடுபடுகிறது
  15. ஒருவர் சரியான அன்பெனும் பாதையைப் பின்பற்றி ,கடவுளைப் பெறுவதற்காக அவரைத் தேடிச்செல்ல வேண்டுமே தவிர அவர் கொடுப்பதைப் பெறுவதற்காக நாடிச் செல்லக்கூடாது.
  16. பரிணாம வளர்ச்சி, எது வளர வேண்டுமோ அதனை வளர்த்தெடுப்பதற்குத்தான் துணை புரியும்.
  17. நீ ஒரு சராசரி மனிதன் என்பதை மறந்து அவருடைய நினைவிலேயே வேலை செய்யும்போது அவரது ஆற்றல் உன் மூலம் செயல்புரியும் விந்தை நடக்கின்றது.
  18. குடும்ப வாழ்வில்தான் நாம் மற்றவர்களை நேசிக்கக் கற்றுக் கொள்கிறோம். உண்மையான வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் கல்விக்கூடம் குடும்பவாழ்க்கையே!
  19. ஒரு பக்தன் எப்போதும் பக்தியின் வட்டத்திற்குள்ளே இருக்கும்போதுதான்,மனிதப் பண்பின் உயர்ந்த தன்மை முற்றிலுமாக வெளிப்படுகிறது.
  20. உடல் நலமின்மை உண்மையிலேயே ஆன்மீக நோய்களைக் குணப்படுத்துகிறது. ஏனெனில் அது சம்ஸ்காரங்களில் சிலவற்றைச் சுட்டெரிப்பதோடு சகிப்பித்தன்மையையும் வளர்க்கிறது.
  21. அறுந்து படாத எண்ணச் சங்கிலியோடு நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளிலும், ஒவ்வொரு கணமும் நாம் மிக உயர்ந்த தெய்வீக சக்தியோடு இணைந்திருப்பதை நம்முள் உணர்ந்து கொண்டிருக்கவேண்டும்.
  22. காத்திருத்தலும் ஒரு விதமான ஆழ்ந்த கடவுளைப் பற்றிய நினைவுதான்; அது ஆன்மீகத்திற்கு மிகவும் பயன்படும் ஒன்று.
  23. கடவுளை உணரும் இலட்சியப்பாதையில் வெற்றிகரமாகப் பயணித்திட ஆர்வம், நம்பிக்கை,பற்றுறுதி ஆகியவை எளிதாக உதவும் அடிப்படை அம்சங்களாகத் திகழ்கின்றன.
  24. பற்றினில் ஒட்டாமல் அனைவரிடமும் அன்பு கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் ,இந்த வழியில்தான் பற்றினில் பற்றில்லாதிருப்பதை நாம் பயில்கின்றோம்.
  25. தியானத்தின் வாயிலாக நாம் ஒரு தற்காலிகமான தூக்க நிலையினை நம் மனதில் உண்டாக்குகின்றோம். அப்போது மேமபட்டிருக்கும் அமைதி நிலையினில் நாம் தெய்வீக சக்தியோடு தொடர்பு கொண்டு இருக்கின்றோம்.
  26. கடவுளை உணர்வதில் நம்மால் வெற்றியடையமுடியும் என்கிற தன்னம்பிக்கை உண்டாவதுதான் அந்த முயற்சியில் விளையும் முக்கியமான அம்சமாகும். மிக உயர்ந்த அந்த நிலையினை அடைந்திட நாம் பலஹீனர்கள், குறைபாடுடையோர் என ஒரு கணம் கூட முட்டாள்தனமாக நினைக்கக் கூடாது.
  27. ஒரு அப்யாஸிக்கு இருக்க வேண்டிய ஒரே முக்கியமான குறிக்கோள் என்னவெனில் அவனுக்குள்ளேயே அவனது இலட்சியத்தைத் தேடுவதுதான்.
  28. பெயர்களிலும், வடிவங்களிலும் சிக்கிக்கொள்ளாது,ஆழமாக உன்னுள் செல்.
  29. நாம் பஞ்சினைப் போன்று இலகுவாய் இருக்கும்போதுதான் ஒரு திறமை வாய்ந்த மாஸ்டருடைய ஒரே ஒரு உந்துதலின் உதவியோடு பரம்பொருளை நோக்கி நாம் பறக்க ஆரம்பிகின்றோம்.
  30. உண்மையான அன்பு இருந்திடின் உடம்பின் ஒவ்வொரு துகளும் ஏழே வருடங்களில் தன்மை மாற்றம் அடைந்து விடும்.
  31. நீ யாரிடத்திலேனும் குற்றத்தைக் காண நேர்கையில் அதிலிருந்து அவர் விடுபட பிரார்த்தனை செய்.
  32. நோய் நொடிகள் அனைத்தும் கடவுள் தரும் வரப்பிரசாதங்கள்.அவற்றில் நிறைய ரகசியங்கள் புதையுண்டு கிடக்கின்றன. அவைகள் தரும் துன்பங்களைத் தாங்கும்போது நிறையவே உள் அனுபவங்கள் உண்டாகும்..
  33. கடவுள் உன்னுடைய இதயத்தினுள் மறைந்து கொண்டு உன்னை வெளியே காட்டுகிறார்.. நீ உன்னை மறைத்துக் கொண்டு கடவுளை வெளியே காட்டு.
  34. அவரிடத்து அன்பும் பிணைப்பும் அதிகமாகும் போது அவரை நோக்கி ஒருவர் மேலும் மேலும் முன்னேறிச் செல்கின்றார்
  35. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நெறியினுக்கு நான் என்னை நானாகவே,எனக்காக உட்படுத்திக் கொள்ளும் தேவையை நான் புரிந்து கொள்ளும்போதுதான் உண்மையான ஒழுங்குக் கட்டுப்பாடு என்னுள் வளருகிறது.
  36. நிதானத் தன்மையையும், சமநிலையையும் மீட்டெடுக்கும் போதுதான் கடவுளை உணர்தல் சாத்தியமாகிறது.
  37. அன்பு அனைத்து வேலைச்சுமையையும் எளிதாக்கி, மாஸ்டரின் பேரருள் பொழிந்து கொண்டிருக்கும் வழியை உருவாக்கி இறுதி இலட்சியத்தை அடைந்திடும் பாதையைச் செப்பனிடுகிறது.
  38. நீ முழுமையாக கொடுக்கும்போது. நீ கொடுத்ததை விடவும் கூடுதலாகப் பெறுகிறாய். இதுதான் சரணாகதியின் தத்துவம்.
  39. நம்முடைய வளர்ச்சிக்கும், நம்முடைய வீழ்ச்சிக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். பண்பு நலன் வாய்ந்த என்னுடைய உணர்வினையும் என்னுடைய மன நிலையினையும் நான் பேணிப் பாதுகாத்து வந்தால் வெளியிலிருந்து வரும் எதுவும் என்னைப் பாதிக்க முடியாது.
  40. தியாகத்தின் மூலமே அன்பு காட்டப்பட வேண்டும். எங்கு அன்பு இருக்கின்றதோ அங்கு தியாகமும் இருக்க வேண்டும். ஏனெனில் நாணயத்தின் இருபக்கங்கள் போன்று அடிப்படையில் அவையிரண்டும் ஒன்றே.
  41. ஆன்மீகம், மிகப்பெரிய அளவில் அறிவுப் பரப்பினைக் கடந்து மனிதர்களை அவர்கள் ஒரே இனம் என்ற நிலையில் ஒன்றிணைக்க முயல்கின்றது.. இதயத்தை நோக்கிய தியானப் பயிற்சி மூலம் மனிதப் பண்புகள் பளிங்குக் கட்டிகளாக உறுதியும் ,தெளிவும் பெற்றிட வேண்டும்.
  42. முற்றிலும் அமைவடக்கம் கொண்டு , அனைத்து விஷயங்களிலும் உறுதியான மனப்போக்குடன் இருப்பதே மிக உயர்ந்த வழிபாடாகும்.
  43. நேரத்தை பயன்படுத்துதல் என்பது அதனை நல்ல விதத்தில், ஆன்மீக வழியில், வளர்ச்சியை மையமாகக் கொண்டு தனக்காக ஒருவர் உபயோகப்படுத்துவதாகும்.
  44. ஒவ்வொரு கணமும் முற்றிலும் பிரபஞ்சமளாவிய வாய்ப்புக:ளையும், நிலைபேறுடைய வாய்ப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒருவர் அவைகளை அந்தக் கணத்திலேயே பயன்படுத்திவிட்டால், அவருக்கு அடுத்த கணம் தேவையே இல்லை.
  45. ஒருவர் அவருடைய முன்னேற்றத்திற்காக,அவருடைய பரிகாரத்திற்காக, அவருடைய பாபவிமோசனத்திற்காக, அவருடைய விடுதலைக்காக எதிர்காலத்தைச் சார்ந்திருந்தால், அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றினைச் சார்ந்திருப்பதற்கு ஒப்பாகும்.
  46. ஒருவர் தெய்வீகத்தோடு இணைந்திருக்க உண்மையாக விரும்பினால், அவர் தெய்வீகத்துடன் இங்கேயே, இப்போதே, இந்தக் கணத்திலேயே, இந்த இடத்திலேயே, இந்த நேரத்திலேயே இருந்தாக வேண்டும்.
  47. எங்களுக்கு அருளப்பட்டிருக்கும் திறன்கள் அனைத்தும் எங்களை மேம்படுத்துவதற்காகவே! அதன்மூலம் எங்களோடு இணைப்பினை; ஏற்படுத்துகின்றோரும் மேம்பட முடியும்..
  48. ஒன்றினை நீ கொடுக்கும் வேளையில்தான், கொடுப்பதன் மதிப்பை நீ அறிந்து கொள்கிறாய்..

 

மாஸ்டரின் பணியில்
அ.ஆறுமுகம்பிள்ளை. 09443281166

 


 

No comments:

Post a Comment