Tuesday, December 17, 2013

இரயில் பயணத்தில் ஒரு உயர் அதிகாரி சொன்ன அவர் கதை

ராசா ஒரு அரசுக் கல்லூரியில் காவல்காரராகப் பணிபுரிந்து வந்தார்.அவரது மகன் அதே கல்லூரியில் பட்டவகுப்பு பயின்று கொண்டிருந்தார். மிக ஏழ்மையானக் குடும்பம். ஓலைக் கூரை வேய்ந்த சின்னஞ்சிறு வீடு. அவர் படித்த காலத்தில் அவரது வீட்டில் மின் வசதி கிடையாது.அவர் பெயர் ராஜசேகரன்.ஏதோ சிவாஜி கணேசன் நடித்த படம் பார்த்துவிட்டு மகனுக்கு சூட்டிய பெயர் அது.
ராஜசேகரனுக்கு ஒரே ஒரு அண்ணன் உண்டு. அவர் அதிகம் படிக்கவில்லை. அவரை எப்பாடுபட்டாவது கல்லூரியில் வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்று ராசா எண்ணினார். அதுபோலவே மகனுக்கும் வேலை அங்கே கிடைத்தது.
கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரும் முதல்வரும் எதற்கெடுத்தாலும் ராசாவை அழைத்து தமக்கு வேண்டிய வேலைகளைச் செய்யச் சொல்வது வழக்கம்.ராசாவும் எந்தவித முகச் சலனம் இல்லாமல் தமது மகனுக்கு வேலைதந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் பணிவிடைகள் செய்து வந்தார்.

நாட்கள் பல கடந்தன.ராஜசேகரன் படித்துப் பட்டம் பெற்றார். அரசுப் பணியாளராக வேலையில் சேர்ந்தார். அதுவும் குரூப் 2 தேர்வு எழுதி மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார்.....

ஒரு நாள் ரயிலில் நான் நாகர்கோவிலுக்கு சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தேன் என் மகன் தினேஷுடன். அது நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்.எனது படுக்கை- இருக்கை A1- 40. அது மேல் மட்டத்தில் இருக்கும் பெர்த். ஒருவர் நாங்கள் இருக்கும் பக்கம் வந்தார். அவருடன் ஒரு வயதான பெரியவரும் வாலிபர் ஒருவரும் வந்தார்கள்.

கையில் இருந்த டிக்கட்டைக் கொடுத்து இது எந்த சீட்டுனு பாருய்யா என்று பெரியவரிடம் கேட்டார் வந்தவர். அவர் மிகவும் பணிவாய் , இது அப்பர் பெர்த்துய்யா என்று சொன்னார். தன் கையில் இருந்த பெட்டியை மிகவும் வேகமாய் கீழே போட்டுவிட்டு  ,” என்னால் மேல ஏறமுடியாதய்யா..” யாரிடமாவது போய் லோயர் பெர்த் தரமுடியுமான்னு போய் கேளும் என்றார்....

அவர் போணில் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெரியவர் வந்து லோயர் பெர்த் எதுவும் கிடைக்கல்ல என்று சொன்னார்.

அவர் ,” நோக்கியா போணுக்கு சார்ஜர் யாரிட்டையாவது கேட்டு வாங்கிற்று வாய்யா......” என்றார். சற்று நேரத்தில் சார்ஜரோடு வந்தார்...... எங்கே சார்ஜரை போடுவது ..... எல்லாமே பயன்பட்டுக் கொண்டிருந்தன...... நான் என் போணை சார்ஜரைப் போட்டு வைத்திருந்தேன். அந்த உதவியாளர் என்னிடம் பார்வையால் பரிதாபமாக கேட்டும் கேட்காமலும்  என்னையே நோக்கி நின்று கொண்டிருந்தார்..... என் மனம் உதவி செய்ய விரும்பியது... நான் என் போணை எடுத்து அவருக்கு வழி விட்டேன்....

நானும் என் மகனும் பேசிக் கொண்டிருந்தோம்..... இரயில் புறப்படும் நேரமும் வந்தது.... உதவியாளர்கள் இறங்குமுன் எங்களிடம் ,’ TTE வந்தால் அவரிடம் சொல்லி சாருக்கு லோயர் பெர்த் வாங்கிக் கொடுங்க சார்” என மிகவும் பணிவாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்...

எங்களுடன் அவர் எதுவும் பேசவில்லை.... ஆனால் நாங்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்..... அவரிடம் பேசவும் எனக்கு தோணல்ல....

TTE வந்தார்.....லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பில்லை....அவருக்கு side upper....
அந்தப் படுக்கையின் கீழ் உள்ள படுக்கையில் யாரும் வரவில்லை. நான் நினைத்தேன்.... கீழ்ப்படுக்கையில் தூங்கவேண்டியதுதானே.... யாராவது கேட்கும்போது கொடுத்துரலாமே......நான் அதை வாய்விட்டு சொல்லல.....

ஆனால் அவர் சொன்னார்..... இதுல படுத்துக்கலாம்...... தூக்கத்துல எழுப்பிச் சொல்வாங்க.... அதற்குப்பின் தூக்கம் தொலைந்துரும்......
எனக்கு ஒரே ஆச்சரியம்....... நாம் நினைப்பது அவருக்கு கேட்டிருக்குமோ !
அவர் தன் பெட்டியைத் திறந்து ஹோட்டலில் வங்கிய டிபனை சாப்பிட எடுத்து  கேபினை விட்டு வெளியே போனார். அங்கே ஒரு படுக்கை ....அது attender படுத்து தூங்குவதற்காக.... அதில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.....

எதற்காகவோ என் மகனைத் தேட அவன் வெளியே நின்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்......

நான் மறுபடியும் என் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன்.

சாப்பிட்டுமுடித்த அவர் அவரது இருக்கையில் அமராமல் காலியாய் இருந்த என் எதிர்பக்கம் உள்ள இடத்தில் அமர்ந்தார்.என் பக்கத்தில் என் மகன் அமர்ந்தான்.

என்னிடம் அவர் பேசினார். “ சார்! உங்க பையன்ட பேசினேன்..... நீங்க கல்லூரியில் ஆசிரியராக retired ஆனவரா ?  நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் இருவர் பேசுவது போல இருந்தது...நான் மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன்....

அவர் என் மகனிடம் ,” பெருமாள் !..... அப்பா அம்மா தான் தெய்வம்.... அப்பா எப்படி வாழ்ந்தாரோ அது போலவே நீயும் வாழ்ந்து அப்பாபெயரைக் காப்பாத்தணும்... மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் என்று வாழவேண்டும்...... உனக்காக மட்டுமே நான்  என் அனுபவத்தை சொல்லுகேன்.... போரடிக்கும் ... கேட்டுக்கொ....நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை..... உன்னிடம் சொல்றேன்...”

நான் இப்போ எப்படி இருக்கேன் பாத்தியா.....(நாகரீகம் கருதி அவர் ஆற்றும் பணியை எழுதவில்லை)....

”நான் பிறந்த வீடு..... ஓலைக் குடிசை..... அதை நான் இன்றும் பழமை மாறாமல் அப்படியே வச்சிருக்கென்.... அன்று அதை எப்படி மாட்டுச் சாணி போட்டு மெழுகினோமோ இன்றும் அப்படியே செய்து பாதுகாத்து வருகிறேன். சின்ன வயதில் குளிருக்குப் போர்த்த போர்வை கிடையாது. கோணிப்பைதான் போர்வை (சாக்கு).   சிம்மணி விளக்கில் தான் நான் படித்தேன்.... நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியே போவதற்கு பயமா இருக்கும்.... மூத்திரம் பெய்ய வெளியே போகக் கூட பயந்து அடக்கி வைத்து தூங்கிருவேன்... எனக்காக அம்மா கண்விழித்துக் காத்திருப்பாள் காலையில் 4 மணிக்குக் கேட்கும் சங்கொலி சப்தத்திற்காக. அந்தச் சத்தம் கேட்டதும் என்னை எழுப்பி விடுவா..... 4 மணியானால் பயம் இருக்காது.... அடக்கிவைத்த மூத்திரத்தை வெளியே போய் கொட்டி விட்டு வீட்டினுள் வந்து படிக்க ஆரம்பிப்பேன்..அதன் பிறகு அம்மா தூங்குவாள்.

நான் நல்ல படிப்பேன்.....என்னுடன் நந்தினி என்ற ஒருத்தியும் படித்தா....அவளுக்கும் எனக்கும் தான் போட்டி..... நான் அவளை நேசித்தேன். அவளும் என்னை நேசித்தாள்..... ஆனால் வறுமையும் வைராக்கியமும் என் கண்ணை மூடவைத்துவிட்டது......காதல் வேண்டாம்... நம் இலட்சியத்துக்கு அது இடையூறாக இருக்கும் என உணர்ந்தேன்... ஆனாலும் அவளை எனக்கு மிகவும் பிடிக்கும்........நானும் அவளும் படித்த கல்லூரியில் தான் என் அப்பா வேலை பாத்தார்.... அவர் முதல்வருக்கு tea  வாங்கிச் செல்லும் போதெல்லாம் என் தேகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் நொறுங்கி விடும்.... நான் வீட்டில் போய் அழுவேன்.... அப்பா வேலை பாத்தா நான் படிக்க மாட்டேன் என அம்மாட்ட சொல்லி அழுவேன்.... எனக்காக அப்பா இரவு வேலைக்கு மாறினார். ஆனாலும் 5 மணிக்கு அவர் கல்லூரிக்கு வந்து விடுவார்....அப்போ... நான்  NCC யில் இருந்தேன்....நானும் அந்த சமயம் அப்பாவைப் பார்ப்பேன்....

என்னைப் பாத்து “ நீ அந்த ராசாவின் மகனா .....” என கேட்பார்கள்... என்னிடம் அருணாசலம்கிற ஆசிரியர் அப்பாவை தேயிலை வாங்கி வரச் சொல்ல சொல்வார்..... நான் சொல்ல மாட்டேன்... நானே வாங்கிக் கொடுத்திருவேன்...

மற்ற மாணவர்கள் அப்பா போவதைப் பாத்து ,” அது யார் தெரியுமா.... நந்தினியோட வருங்கால மாமனார்...”... இது அவள் காதிலும் விழும்... அப்போ அவள் என்ன நினைச்சா என்று எனக்குத் தெரியாது.... ஆனால் அவள் எனக்கு வேண்டாம்.....படித்தேன்.... படித்தேன்... முதுகலைப் பட்டமும் படித்து தமிழ் நாடு பப்ளிக் செர்வீஸ் கமிஸ்ஸன் செகண்ட் குரூப் தேர்வு எழுதினேன். இன்று நான் மிக உயர்ந்த பதவியில் இருக்கேன்..... கோடீஸ்வரி எனக்கு மனைவியானாள்..... ஆரம்பத்தில் சண்டை சச்சரவெல்லாம் உண்டு.... என் மனைவி நான் சொன்னதைக் கேட்காவிட்டால் என் மனம் அமைதி இழந்து விடும்.... நான் என் குடிசையில் போய் என் அப்பாவின் அருகே போய் அழுவேன்.....என் அம்மா மரணத்திற்குப்பின் அப்பாதான் எனக்கு அம்மா...
 ஏன்பா..... எனக்கு பணக்காரப் பொண்ணை கட்டி வச்சேனு அழுவேன்..... என்னை சமாதானப்படுத்துவார். என்னிடம் மன்னிப்பு கேட்க என் மனைவி வருவா.... அதன் பிறகுதான் எனது பெரிய வீட்டுக்குப் போவேன்.

ஒரு சமுதாயப் பிரச்சினைக்கு தீர்வு காண நான் படித்த அதே கல்லூரிக்குப் போனேன். ஏற்கனவே அங்கே கல்லூரிப் பாதுகாப்புக்கு நின்ற போலிஸ் உயர் அதிகாரிகள் எனக்கு மரியாதை கொடுத்ததையும் என் பேராசிரியர்களே எழுந்து நின்று வரவேற்ற காட்சியையும்  தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த எனது தந்தையின் பிரகாசமான முகத்தைக் கண்டு என் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. என்னை வரவேற்றுப் பேசிய பேராசிரியர், எப்பவும் ராசாவின் மகன் என்றே அழைத்துப் பழக்கப்பட்ட அதே அருணாசலம் சார் என் பெயர் சொல்வதில் திணறியதைக் கண்டேன்.
நான் பேசும் முன் நான் என் அப்பாவை வணங்கி அதன் பிறகு பேசினேன்.

வள்ளுவர் வாக்கு...... நானே உதாரணம்......

தம்பி பெருமாள் ..!  கடவுளைக் கும்பிடணும்னு நான் சொல்ல மாட்டேன்.... அப்பா.... அம்மாவைக் கும்பிடணும்.....

இப்பவும் அலுவலகப்பணியிலும் சோதனைகள் வரும்..... மறைந்து போன அப்பாவை நினைப்பேன்..... நல்ல வழிகிடைக்கும்.

எனது மகன் என்னிடம் பேசுவான்.... நானும் பேசுவேன்.....அவன் முகத்தை நான் பார்க்கவே மாட்டேன்.... ஆனால் நீயும் அப்பாவும் நண்பர்கள் இருவர் பேசுவது போல இருந்தது.... எனக்கு மிக்க மகிழ்ச்சி..... முடிந்தால் என்றாவது எங்கேயாவது சந்திப்போம்.  உன் போண் எண்ணைச் சொல்... அவர் அதை டயல் செய்ய அவர் எண்ணும் என் மகன் செல்லிலும் பதிவானது....

நான் காலையில் கண் விழித்துப் பார்த்த போது அவர் இல்லை.

அந்த side lower பெர்த் நாகர்கோவில் வரை யாரும் பயன் படுத்தாமல் காலியாகவே இருந்தது....




No comments:

Post a Comment