Sunday, September 29, 2013

எனக்கும் தோசைச் சுட்டுத் தின்ற அனுபவம் உண்டே..

நான் இரண்டு நாட்களுக்கு முன்னால்  என் நண்பன் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

உன் மகன் இப்போ எங்க இருக்கான் ? நான் கேட்டேன்.

அவன் யூஎஸ்ல படிச்சிட்டிருக்கான் என்று சொன்னான்.

 ஹாஸ்டலில் சாப்பாடு எல்லாம் அவனுக்கு பிடிச்சிரிக்கா ?

 நாலைந்து பேர் சேர்ந்து  ஒரு இடத்தில் இருக்காங்க. அவங்களே சமைத்துதான் சாப்பிடுறாங்க. இந்தியாவில் இருந்து போகும்போது ஊறுகாய், மற்ற அத்தியாவசியமான தேவைக்கு மிளகுப் பொடி போன்றவைகளை கொண்டு போயிருக்கான்......

சமையல் பற்றி பேச்சு வளர்ந்தது....

உனக்கு சமையல் தெரியுமா எனக் கேட்க தெரியும் எனச் சொன்னான்.

 எனக்குத் திங்க (சாப்பிட)த் தெரியும் என்றேன் நான்.

தோசையாவது சுடத்தெரியுமா? அவன் (நண்பன்) கேட்க  தெரியாது என்பதற்கு அடையாளமாக தலையசைத்தேன்.

அவன் போய் விட்டான். நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்.....
 கடிகாரமுள் வேகமாக பின்னோக்கிச் சென்றது..........

2004  ஜுன் மாதம்  என் மனைவி பெங்களூர் சென்றிருந்தாள்.... ஒரு மாதம் நான் இங்கே நாகர்கோவிலில் தனியாக இருந்தேன். எனக்கு உதவியாக ராமன் என்றொருவர் தங்கி எனக்குத் தேவையான சமையல் பதார்த்தங்களை சமைத்து தந்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவர் இல்லை....
 நான் வென்னீர் போட முயன்று எப்படி கேஸ் திறக்க வேண்டும் எனத் தெரியாமல்  திணறி செய்வதறியாமல்  வெறும் தண்ணீரைக் குடித்தேன்.
எப்படியோ கேஸ் அடுப்பை பற்ற வைக்கக் கற்றுக் கொண்டேன்.

தோசை சுட்டுச் சாப்பிடும் அருமையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அந்த நாளும் வந்தது....
 காலையில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்தேன். தண்ணீர் தொளிக்கணுமா ? எண்ணெய் தடவணுமா? மாவினை கல்லில் விட்டபின் என்ணெயை ஊத்தணுமா ?......

நான் எண்ணெயைத் தடவி கல்லில் தோசை மாவை ஊற்றினேன்.... தோசை சரியாக வரவில்லை.... மிகவும் அழுக்காகவும் தின்பதற்கு உபயோகமில்லாமலும் அலங்கோலமாக துண்டு துண்டாக வந்தது.... என்னடா  இப்படி ஆயிற்றே என்று நொந்து போனேன்.    தவறு என்ன என்பதை நானே புரிந்து கொண்டேன். கல்லை மாத்திப் போட்டதால் தான் தோசை சரியா வரல்ல.
அந்த சமயம் பாத்து வீட்டில் வேலை பார்க்கும் பீவிப் பாட்டி வந்து...... என்ன இது....? என்று கேட்க தோசைக்கல்லை மாத்திப் போட்ட திருவிளையாடலை ச் சொல்ல அவள் சிரித்துக் கொண்டே தோசை சுட்டுத் தந்தாள். மறுபடியும் அப்படியொரு சூழ்நிலை  எனக்கு ஏற்படவில்லை அதனால் அடுப்படி பக்கம் செல்வதில்லை......நான் தோசை சுட்ட கதை என் உறவினர்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது... சொன்னது என் தர்ம பத்தினிதான்.

காலச்சக்கரம் 2013 ஆகஸ்டில் வந்து நின்றது. சென்னைக்கு இரண்டு நாள் திருமண விழாவுக்குச் சென்றிருந்தாள்.

காலையில் கண்விழித்தேன். செய்வறியாது காலையில் விழி பிதுங்க யோசித்துக் கொண்டிருந்தேன்.......பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு மருமகள் யாரும் இல்லை.... எல்லோரும் சென்னையில்......

தண்ணீரைச் சூடாக்கி பசுமைத் தேயிலைப் பையை அதில் மூழ்க வைத்துக் குடித்தேன். இதுவே  என் வாழ்வில் எனது  முதல் தயாரிப்பு. ஆஹா... என்ன ருசி.. பேஷ் ..பேஷ்... எனக்கு நானே கூறிக்கொண்டேன்.

காலையில் சாப்பிட நாமே தோசை சுட்டுச் சாப்பிடவேண்டும் என நினைத்து மிகவும் கவனமாக அடுப்பை பத்த வைத்து தோசைக்கல்லை சரியாக அடுப்பில் வைத்து  எண்ணெய் தடவி தோசை சுட்டு அதை தட்டில் வைத்து அடுத்த தோசைக்கு  மாவை கல்லில் விட்டேன்...... அடுத்த வீட்டில் காவலுக்கு இருந்த தம்பிரானண்ணனுக்கும் தோசை கொடுக்க நினைத்து அவனை அழைக்க வெளியே போனேன்...... அந்த சமயம் பாத்து பேப்பர்காரன் வர நான் பேப்பரை படித்துக் கொண்டே மெதுவாக அடுக்களைக்குள் வந்தேன்.

 கல்லில் தோசை பப்படம் போல் பொரிந்தும் கரிந்தும் என்னைப்பார்த்து பல்லிழித்தது...
கையாலேயே அதை எடுத்து யாரும் பார்த்து விடக்கூடாதே என்பதற்காக தின்றேன்...... ஆஹா.... என்ன ருசியாய் இருக்கு........உண்மையில் எனக்கு மிகவும் ருசியாகவே இருந்தது....

அதன்பிறகு மிக அழகாக தோசை சுட்டு நாங்கள்  அருந்தினோம்.. தோசை சாப்பிட்ட தம்பிரானண்ணன் வருவோர் போவோர் அனைவரிடமும் ,” தங்கப்பன்  எனக்குத் தோசை சுட்டுத் தந்தான்... நல்லா இருந்து...” சொல்லிக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு தோசை சுடத்தெரியாது என்று சொன்னதில் தான் எனக்கு அதிக சந்தோசம்..... ஆஹா.... 66 வயதில் நான் எவ்வளவு பெரிய சாதனை செய்து விட்டேன்.

மிகப்பெரிய சாதனை..........

வரவேண்டிய சமயத்தில் வராத  பாட்டி மெதுவாக , இட்லி அவித்து தரட்டுமா ? எனக் கேட்டுக் கோண்டே உள்ளே வந்தாள்.

சாப்பிட்டாச்சு என நான் சொன்னதைக் கேட்டு வியப்புடன் எனைப் பார்த்தாள்.

நான் என் சாதனையை அவளிடம் சொன்னேன்.

“ நீ வரல்ல..... எனக்கு வயறு பசிச்சு.... நானே தோசை சுட்டு ச் சாப்பிட்டேன்.....”

அவளுக்கு ஒரே சிரிப்பு......  அவள் .” தோசைக்கல்லை மறிச்சுப் போட்டு சுட்டீங்களா ? இல்ல சரியாப் போட்டீங்களா?”

பழைய கால நினைவு அவளை அப்படிப் பேச வைத்தது...... ரசித்துச் சிரித்தேன்....

எனக்கு சரியாகத் தேயிலை போடுவதற்கும் இட்லி அவிப்பதற்கும் வழி முறைகளை அறிந்து வைத்திருக்கிறேன். அடுக்களை எனக்காக கத்திருக்கு ?

என் மனைவி வெளியூர் செல்லும் நாள் வரும்......

என் கையால் சுடும் ...... இல்ல இல்ல....அவிக்கும் இட்லி எப்படி இருக்குமோ!