Tuesday, December 24, 2013

தெய்வமே குடிகொள்ள விரும்பும் ஒரு அன்புஇல்லம்

ஒரு வியாழன் அதிகாலையில் எனது மொபைல் தனது பணியை தவறாமல் செய்து எனை உறக்கத்தில் இருந்து எழச்செய்தது.....

காலையில் மார்த்தாண்டம் பக்கம் உள்ள அதங்கோடு எனும் ஊருக்குப் போகவேண்டும்... எட்டரை மணிக்கு மேல்தான்....அதனால் காலை நடையினை ரத்து செய்திருந்தேன்...

அதனைத் தூங்கப் போகுமுன் மொபைலிடம் நான் சொல்லியிருக்கணும்... சொல்லல......

மொபைலின் வாயை மூடினேன்... இல்லையெனில் நான் எழுந்து அதனைத் தொடுவது வரை ரெண்டு நிமிடத்திற்கொரு முறை அலறும்.....

மறுபடியும் கண் மூடி தூங்க எத்தனித்தேன்......

மறுபடியும் என் காதருகே சத்தம்... ”எழந்திங்கோ.... ஆறுமணிக்கு ராமு வந்துருவான்.... வெள்ளமடத்துக்கு துட்டிக்குப் போகணும்.....” இது என் அவள்.

நான் வரல்ல.... நீப்......போ.....

”வாருங்கோ... மாத்தம்மாச்சிக்கு அக்காள்லா அது...... (அவள் இறந்து நாலு நாளாச்சு.....) போகல்லண்ணா அவ என்னமா நினச்சுருவா......வாங்க...... “

சொல்லிவிட்டுப் போய்விட்டாள்....

பாதிமனசோடு எழுந்தேன்.....

அந்த வீட்டுக்குப் போனோம்.....அது ஒரு பழைய வீடு... அதன் வாசல் அருகே மொட்டைத் தலையோடு நின்றிருந்தார் ஒருவர்... இறந்துபோன ஆச்சியின் நாலு மகன்களில் ஒருவர்

சிரிக்காமல் ..... ஆனால் வாஞ்சையோடு வா என்பதுபோல் தலையசைத்து அழைத்தார்.....

உள்ளே போக நினைத்து வாசல் பக்கம் போனேன். அந்த வீட்டு முற்றத்தில் உறவுக்கார பெண்கள் அனைவரும் மாரடித்துக்கொண்டு  அம்மாடி-தாயர  எனப் பல முறை முணு முணுத்தபடி சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

 அச்சமயம் உள்ளே ஆண்கள் போலாமா..... தெரியாது... நான் போகமல் தெருவில் உள்ள படிப்பரைல ....கருங்கல் பதித்த இடம்....அதில் இருந்தேன்.

வீடு புதுப்பிக்காமல் பழமை மாறாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சுத்துக்கட்டு வீடு. முற்றம் ...அதன் தெற்கிலும் மேற்கிலும் வாசல்கள்.... வடக்குப் பக்கம் ஜன்னல்.... ஓட்டுவீடு

அதன்பிறகு ஒருவர் எனை அழைக்க நான் உள்ளே போய் இருந்தேன்.....

எனக்குத் தெரிந்த ஒரு மொட்டை போட்ட இன்னொரு மகன் என் பக்கம் வந்தமர்ந்தார்...

அவர், “ அம்மை படுத்து ரொம்பநாளாயிற்று...வயசும் 90-க்கும் மேல.... கொஞ்சம் கஷ்டப்பட்டுற்றா.....மகளுக்கு நிச்சயதாம்பூலம்  இரண்டு நாட்களுக்கு முன்தான் நடந்தது. மே மாதம் கல்யாணம்...”.

என்னிடம் பேசியவரின் பெயர் சண்முகம்....

சண்முகத்தின் தந்தை  மறைந்து வருடங்கள் பல கடந்து விட்டன.....அவருக்கு நான்கு ஆண்...ஏழு பெண் பிள்ளைகள்..... தனதும் தன் மனைவியின் மறைவுக்குப் பின்,இருவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிவது வரை வீட்டை ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்ன அப்பாவின் வாக்கினை தெய்வ வாக்காகப் போற்றிப் பாதுகாப்பாய்  மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கின்றனர்.. இது அவரது  உறவினர் பாபு என்னிடம் சொன்னது......
அப்பாவையும் அம்மாவையும் மிகப் பாதுகாத்த பல விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்கு அந்த சண்முகம் மீதும் அவர் மனைவி மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது...

சண்முகம் தான் அந்த வீட்டில் இளையவர். அவர்தான் அந்த வீட்டின் முதுகெலும்பாய் இருந்தார்.

சண்முகத்துக்கு ஒரே ஒரு பிள்ளை...அது பெண்.... பீஇ படித்து வேலை பாக்குறா.....அவளுக்கும் கல்யாணம் நிச்சயாமாயிருக்கு.... ஆனால் அவளைவிட அதிகம் வயதான தனது அண்ணன் மகள் திருமணம் முடிந்தபின் தான் தம் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததையும் அறிந்தேன். அவர் மீதுள்ள மதிப்பு கூடிக் கொண்டே போயிற்று....


அவருடன் பிறந்த சகோதரிகளில் ஒருத்தி திருமணம் முடிந்த ஓரிரு வருடத்தில் அகால மரணம் அடைந்து விட்டாள் பல வருடங்களுக்கு முன்னால். அப்போது அவளது பெண் குழந்தைக்கு வயது இரண்டு மாதம்.
என்ன செய்வது....

 யாரும் முன்வராத நிலை....... அந்தக் குழந்தையை எடுத்து வந்தார்கள் சண்முகமும் அவர் மனைவியும்.....

தன் பிள்ளைபோல் வளர்த்து படிக்க வைத்தார்கள். B.E பட்டம் பெற்றாள்.வேலையும் கிடைத்தது...அந்தப் பெண்பிள்ளைக்குத் திருமண வயது வந்தது. மாப்பிள்ளை பார்த்தார்.
சொந்தத்தில் ஒரு பையனை அதுவும் இவர் செலவு செய்து படிக்க வைத்த பையனை மணமுடிக்க முடிவெடுத்து திருமண வேலை நடந்தது....

திருமண அழைப்பிதழ் அச்சடிக்க எழுதி அந்தப் பெண்ணிடம் காண்பித்தார்கள்.

அந்தப் பெண்ணின் தந்தைபெயர் இருந்த இடம் அவள் கண்டாள்.

அவள் சண்முகத்திடம்,“ மாமா..... என்னை வளர்த்தது நீங்க....நான் வளர்ந்தது இங்க.. அத்தை தானே மாமா எனக்கு அம்மா.....கல்யாண லெட்டரில் உங்கள் பெயரை இப்படிக்கு சண்முகம் எனப் போடணும். என் பெயர் வரும் இடத்தில் எனது மகள் என்று போடணும்...” என்றாள்.

கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் பனித்தன. இப்படியும் மனிதர்கள் உள்ளனரா....நன்றியை எவ்வளவு அழகாய் காண்பித்து விட்டாள்...மகளைப் போல வளர்த்த அந்தத் தாய் எப்படி அகம் மகிழ்ந்திருப்பாள்....

ஆசை மகள் ஆசைப்பட்டது போல் ..... எல்லாம் நடந்து முடிந்தது....

கணவனுக்கும் வேலை உண்டு..

இறையருளால் அவர்களுக்கு பெண் குழந்தை..... அவர்கள் இருவரும்வேலைக்குப் போகணும்..... பிள்ளையைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கணும்.... என்ன செய்ய....

இப்போதும் ஆதரவுக் கரங்கள், அவளை அணைத்து வளர்த்த அதே கரங்கள் உதவிக்கு வந்தன.

“நான் இருக்கேன்.... பிள்ளையை நான் பாத்துக்கேன்.... நீங்க இருவரும் வேலைக்குப் போங்கோ....”

இரண்டு மாதக் குழந்தையை தாயினும் மேலாய்ப் பேணி வளர்த்து வருகிறாள். அந்தப் பிள்ளையை தரையில் விட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்....

அவள் வளர்த்த இரண்டு பெண்பிள்ளகளும்...ஒன்று அண்ணிபெற்றபிள்ளை...மற்றொன்று தான் பெற்ற பிள்ளை....பொறியியல் பட்டதாரிகள்......

இதோ மூன்றாம் பெண் பிள்ளை..... இடுப்பில் இருந்து இறங்காமல் ஆச்சியிடம்
வளர்கிறது.
அந்தப் பால்குடி மாறா சிசுவை வைத்திருக்கும்  ஆச்சிக்கு அது சுமையாய் இல்லை.  சுகமாய் இருக்கு.

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமம்மா....

எனக்கு, என் உணர்வுகளும் என் புலன்களும் நெகிழ்ந்து போய்க் கொண்டே இருப்பது போன்ற உணர்வு....நானென்ற அகந்தை என்னிடம் இருந்து வேகமாய்ப் போவது போன்ற உணர்வு....

நான் அதிசயமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தேன்....

ஒரு பெண்.... சண்முகத்தின் மனைவி.... குழந்தைக்கு மட்டுமா தாயாய் இருந்தாள்.

அவள் கணவரைப் பெற்ற தாய்....அந்தத் தாய்க்கு எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும் அவளை அன்போடு அரவணைத்த கரங்கள் இவளுடையதே.

தள்ளாத வயதில் வயோதிகம் காரணமாய்  சுருங்கிக் கிடந்த    மாமியாரை அன்னைபோல் அருகே அமர்ந்து, அமுதூட்டி அகமும் முகமும் மலர அரவணைத்தாளே....... அது மாமியார் பெற்ற பாக்கியம்.

தன் அருகே படுக்க மருமகளை அழைப்பாளாம் அவளை அன்னையாய் நினத்து.

மாமியார் உயிர்  இருக்கும்வரை மறவாமல் உச்சரித்த பெயர் ,ஒரே ஒரு பெயர் தான்.....   அது சண்முகத்தின் மனைவியின் பெயரே.

நல்ல மகள்..... நல்ல மனைவி..... நல்ல தாய்....  எல்லாமே  --- தான்...

முதலில் வீட்டைப் பார்த்த போது இருந்த என் நினைப்பு , இப்போ மாறி விட்டது. வீடு பழசானது... சின்னதாய் இருந்தது. அங்கு வாழும் மனிதர்களின் மனம் விசாலமானது. இதயம் சிறிதெனினும் எத்தனைபேர் இருந்தாலும் அத்தனை பேர்களையும் அந்த இதயம் தாங்குகிறதே.....

அது... ஒரு இல்லம்... அன்பு இல்லம்... தெய்வமே குடி கொள்ள விரும்பும் இல்லம்.... அன்னை இல்லம் அது.

[ உண்மைப் பெயரை குறிப்பிடவில்லை.... அடுத்தவீட்டு ஜன்னல் வழியாய்ப் பார்த்ததை வெளியே சொல்லாதே என்று யாரோ ஒருவர் சொன்னது  இன்று என் நினைப்புக்கு வந்து தொலைத்தது......  கேட்டவை அனைத்தும் பதிவு செய்யப்படவில்லை. நான் செய்தது சரியோ? தவறோ? நானறியேன்]


Wednesday, December 18, 2013

குறும்படத் தகடு வெளியிட்ட செந்திலுக்கு நான் எழுதிய கடிதம்

தாத்தாதம் பெயர் கொண்ட அனந்தபத்மனாபனுக்கு.
வாழ்க…. வளர்க…..
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அண்ணா என்று உரக்கக் கூவணும் போல் இருக்கிறது. எனது உடன்பிறவா சகலர்- உன் அப்பாவை நினைத்து……

காலங்கள் உனை எங்கோ அழைத்துச் சென்றது. காற்றடித்த திசையில் பறந்தாய்….. தெற்குப் பக்கம் காற்றின் திசை இருந்தால் கிரிக்கட்.
மேற்குப்பக்கமோ அலுவலகப்பணி. வடக்கே காற்றிழுத்தால் வேதனை ….கிழக்கே இப்போ காத்தடிக்குது. கிழக்கே போகும் ரயில் பயணம்…போல் நிழலில் உண்மையைத் தேடும் பயணம்..

 உன்னாலும் முடியும் தம்பி என்பதை உணர்ந்து இன்று எவரும் எதிர்பாராவண்ணம் இரகசியமாய் பொறுமையாய் ஒரு பணிதனை செய்திருக்கிறாய்…… பாரதியாய். பாரதியே நேரில் வந்துவிட்டாரோ என்ற பிரம்மையை நிகழ்த்தி இருக்கிறாய்….. இதைக் கண்டு நெகிழ்ந்திட தந்தை இல்லை…பாராட்டிட நடிகர் திலகம் இல்லை. பாரதி வேடப் பொருத்தம் மிகுந்த சுப்பையா இல்லை. இருந்திருந்தால் எல்லோர் கண்ணிலும் நீர்… அது ஆனந்தக் கண்ணிராய் வடிந்திருக்கும்…..


சிப்பிக்குள் முத்து நீ. முத்துவின் தனயன் நீ

உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு. வெள்ளைத்தாளில் வந்த வெள்ளமில்லாக் கிணறு உன் அறிவின் ஆழத்தைக் காட்டிற்று—வைரவிழாமலர்………… கணிதமும் தமிழும் கொஞ்சி விளையாடும்….கம்பனே கல்லூரிக்கு வந்தால் கலகலத்துப் போவான் என்றெல்லாம் எழுதிய போதே உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு என எண்ணினேன். எண்ணம் கனவல்ல….. நனவே… சான்று.. கதை- வசனம்- நடிப்பு என்ற மூன்றிலும் ஒற்றை மனிதனாய் “பாரதியின் பாதிக்கனவு” எனும் குறும்திரைக் காவியம்தனை வெளியிட்டது நீ என்பதுவே….

ஒன்று எனச் சொல்… அனைவரும் ஒன்றே.
வித்தியாசாகர் நினைவப் போற்றும் போதே உன் தெளிவு புரிகிறது….. எவரை எப்படி நினைக்கவேண்டுமோ அப்படி நினைத்து மிகத் தெளிவாய் அஞ்சலி செலுத்திய பாங்கு பாராட்டப்படவேண்டிய ஒன்று.

  முகம், முகவரி தந்தவர்களை வணங்கிய விதம் கவர்ந்தது…..


நடிப்பு…. என் பாராட்டுதல் கோடிக் கோடி….. ஒப்பனையாளர், கேமரா எல்லாமே மிக பாராட்டும்படி இருந்தது….. இருப்பினும் ஒலிப்பதிவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிலாமோ என்று எண்ணினேன்…. தவறு என்று சொல்ல எனக்குப் போதிய அறிவில்லை….

உன் நடிப்பு… ஆஹா… என்ன அழகு…செந்திலா இது என என் விரலை மூக்கில் வைக்கும்படியாய் இருந்தது…. என்ன ”பாவம்”…ரசித்தேன்…..

எத்துறையாயினும் நீ அத்துறையில் உன் திறமையைக் காட்டு….. பெருமை கிட்டும்….. அடக்கம் ஒன்றே உயர்ந்தது…. உன் சுபாவத்தால் எல்லோரிடமும் அன்பாய் பணிவாய் நடந்து, இன்னமும் பல முத்துக்களும் வைரங்களும் உன் கிரீடத்தை அலங்கரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்….

   எல்லாப் புகளும் இறைவனுக்கே……

அன்புடன்
தங்கப்பன்.
11-12-13


Tuesday, December 17, 2013

இரயில் பயணத்தில் ஒரு உயர் அதிகாரி சொன்ன அவர் கதை

ராசா ஒரு அரசுக் கல்லூரியில் காவல்காரராகப் பணிபுரிந்து வந்தார்.அவரது மகன் அதே கல்லூரியில் பட்டவகுப்பு பயின்று கொண்டிருந்தார். மிக ஏழ்மையானக் குடும்பம். ஓலைக் கூரை வேய்ந்த சின்னஞ்சிறு வீடு. அவர் படித்த காலத்தில் அவரது வீட்டில் மின் வசதி கிடையாது.அவர் பெயர் ராஜசேகரன்.ஏதோ சிவாஜி கணேசன் நடித்த படம் பார்த்துவிட்டு மகனுக்கு சூட்டிய பெயர் அது.
ராஜசேகரனுக்கு ஒரே ஒரு அண்ணன் உண்டு. அவர் அதிகம் படிக்கவில்லை. அவரை எப்பாடுபட்டாவது கல்லூரியில் வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்று ராசா எண்ணினார். அதுபோலவே மகனுக்கும் வேலை அங்கே கிடைத்தது.
கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரும் முதல்வரும் எதற்கெடுத்தாலும் ராசாவை அழைத்து தமக்கு வேண்டிய வேலைகளைச் செய்யச் சொல்வது வழக்கம்.ராசாவும் எந்தவித முகச் சலனம் இல்லாமல் தமது மகனுக்கு வேலைதந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் பணிவிடைகள் செய்து வந்தார்.

நாட்கள் பல கடந்தன.ராஜசேகரன் படித்துப் பட்டம் பெற்றார். அரசுப் பணியாளராக வேலையில் சேர்ந்தார். அதுவும் குரூப் 2 தேர்வு எழுதி மிக உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார்.....

ஒரு நாள் ரயிலில் நான் நாகர்கோவிலுக்கு சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்தேன் என் மகன் தினேஷுடன். அது நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்.எனது படுக்கை- இருக்கை A1- 40. அது மேல் மட்டத்தில் இருக்கும் பெர்த். ஒருவர் நாங்கள் இருக்கும் பக்கம் வந்தார். அவருடன் ஒரு வயதான பெரியவரும் வாலிபர் ஒருவரும் வந்தார்கள்.

கையில் இருந்த டிக்கட்டைக் கொடுத்து இது எந்த சீட்டுனு பாருய்யா என்று பெரியவரிடம் கேட்டார் வந்தவர். அவர் மிகவும் பணிவாய் , இது அப்பர் பெர்த்துய்யா என்று சொன்னார். தன் கையில் இருந்த பெட்டியை மிகவும் வேகமாய் கீழே போட்டுவிட்டு  ,” என்னால் மேல ஏறமுடியாதய்யா..” யாரிடமாவது போய் லோயர் பெர்த் தரமுடியுமான்னு போய் கேளும் என்றார்....

அவர் போணில் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெரியவர் வந்து லோயர் பெர்த் எதுவும் கிடைக்கல்ல என்று சொன்னார்.

அவர் ,” நோக்கியா போணுக்கு சார்ஜர் யாரிட்டையாவது கேட்டு வாங்கிற்று வாய்யா......” என்றார். சற்று நேரத்தில் சார்ஜரோடு வந்தார்...... எங்கே சார்ஜரை போடுவது ..... எல்லாமே பயன்பட்டுக் கொண்டிருந்தன...... நான் என் போணை சார்ஜரைப் போட்டு வைத்திருந்தேன். அந்த உதவியாளர் என்னிடம் பார்வையால் பரிதாபமாக கேட்டும் கேட்காமலும்  என்னையே நோக்கி நின்று கொண்டிருந்தார்..... என் மனம் உதவி செய்ய விரும்பியது... நான் என் போணை எடுத்து அவருக்கு வழி விட்டேன்....

நானும் என் மகனும் பேசிக் கொண்டிருந்தோம்..... இரயில் புறப்படும் நேரமும் வந்தது.... உதவியாளர்கள் இறங்குமுன் எங்களிடம் ,’ TTE வந்தால் அவரிடம் சொல்லி சாருக்கு லோயர் பெர்த் வாங்கிக் கொடுங்க சார்” என மிகவும் பணிவாகச் சொல்லிவிட்டுப் போனார்கள்...

எங்களுடன் அவர் எதுவும் பேசவில்லை.... ஆனால் நாங்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்..... அவரிடம் பேசவும் எனக்கு தோணல்ல....

TTE வந்தார்.....லோயர் பெர்த் கிடைக்க வாய்ப்பில்லை....அவருக்கு side upper....
அந்தப் படுக்கையின் கீழ் உள்ள படுக்கையில் யாரும் வரவில்லை. நான் நினைத்தேன்.... கீழ்ப்படுக்கையில் தூங்கவேண்டியதுதானே.... யாராவது கேட்கும்போது கொடுத்துரலாமே......நான் அதை வாய்விட்டு சொல்லல.....

ஆனால் அவர் சொன்னார்..... இதுல படுத்துக்கலாம்...... தூக்கத்துல எழுப்பிச் சொல்வாங்க.... அதற்குப்பின் தூக்கம் தொலைந்துரும்......
எனக்கு ஒரே ஆச்சரியம்....... நாம் நினைப்பது அவருக்கு கேட்டிருக்குமோ !
அவர் தன் பெட்டியைத் திறந்து ஹோட்டலில் வங்கிய டிபனை சாப்பிட எடுத்து  கேபினை விட்டு வெளியே போனார். அங்கே ஒரு படுக்கை ....அது attender படுத்து தூங்குவதற்காக.... அதில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.....

எதற்காகவோ என் மகனைத் தேட அவன் வெளியே நின்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்......

நான் மறுபடியும் என் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டேன்.

சாப்பிட்டுமுடித்த அவர் அவரது இருக்கையில் அமராமல் காலியாய் இருந்த என் எதிர்பக்கம் உள்ள இடத்தில் அமர்ந்தார்.என் பக்கத்தில் என் மகன் அமர்ந்தான்.

என்னிடம் அவர் பேசினார். “ சார்! உங்க பையன்ட பேசினேன்..... நீங்க கல்லூரியில் ஆசிரியராக retired ஆனவரா ?  நீங்க ரெண்டு பேரும் நண்பர்கள் இருவர் பேசுவது போல இருந்தது...நான் மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன்....

அவர் என் மகனிடம் ,” பெருமாள் !..... அப்பா அம்மா தான் தெய்வம்.... அப்பா எப்படி வாழ்ந்தாரோ அது போலவே நீயும் வாழ்ந்து அப்பாபெயரைக் காப்பாத்தணும்... மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் என்று வாழவேண்டும்...... உனக்காக மட்டுமே நான்  என் அனுபவத்தை சொல்லுகேன்.... போரடிக்கும் ... கேட்டுக்கொ....நான் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை..... உன்னிடம் சொல்றேன்...”

நான் இப்போ எப்படி இருக்கேன் பாத்தியா.....(நாகரீகம் கருதி அவர் ஆற்றும் பணியை எழுதவில்லை)....

”நான் பிறந்த வீடு..... ஓலைக் குடிசை..... அதை நான் இன்றும் பழமை மாறாமல் அப்படியே வச்சிருக்கென்.... அன்று அதை எப்படி மாட்டுச் சாணி போட்டு மெழுகினோமோ இன்றும் அப்படியே செய்து பாதுகாத்து வருகிறேன். சின்ன வயதில் குளிருக்குப் போர்த்த போர்வை கிடையாது. கோணிப்பைதான் போர்வை (சாக்கு).   சிம்மணி விளக்கில் தான் நான் படித்தேன்.... நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியே போவதற்கு பயமா இருக்கும்.... மூத்திரம் பெய்ய வெளியே போகக் கூட பயந்து அடக்கி வைத்து தூங்கிருவேன்... எனக்காக அம்மா கண்விழித்துக் காத்திருப்பாள் காலையில் 4 மணிக்குக் கேட்கும் சங்கொலி சப்தத்திற்காக. அந்தச் சத்தம் கேட்டதும் என்னை எழுப்பி விடுவா..... 4 மணியானால் பயம் இருக்காது.... அடக்கிவைத்த மூத்திரத்தை வெளியே போய் கொட்டி விட்டு வீட்டினுள் வந்து படிக்க ஆரம்பிப்பேன்..அதன் பிறகு அம்மா தூங்குவாள்.

நான் நல்ல படிப்பேன்.....என்னுடன் நந்தினி என்ற ஒருத்தியும் படித்தா....அவளுக்கும் எனக்கும் தான் போட்டி..... நான் அவளை நேசித்தேன். அவளும் என்னை நேசித்தாள்..... ஆனால் வறுமையும் வைராக்கியமும் என் கண்ணை மூடவைத்துவிட்டது......காதல் வேண்டாம்... நம் இலட்சியத்துக்கு அது இடையூறாக இருக்கும் என உணர்ந்தேன்... ஆனாலும் அவளை எனக்கு மிகவும் பிடிக்கும்........நானும் அவளும் படித்த கல்லூரியில் தான் என் அப்பா வேலை பாத்தார்.... அவர் முதல்வருக்கு tea  வாங்கிச் செல்லும் போதெல்லாம் என் தேகத்தில் உள்ள எல்லா உறுப்புகளும் நொறுங்கி விடும்.... நான் வீட்டில் போய் அழுவேன்.... அப்பா வேலை பாத்தா நான் படிக்க மாட்டேன் என அம்மாட்ட சொல்லி அழுவேன்.... எனக்காக அப்பா இரவு வேலைக்கு மாறினார். ஆனாலும் 5 மணிக்கு அவர் கல்லூரிக்கு வந்து விடுவார்....அப்போ... நான்  NCC யில் இருந்தேன்....நானும் அந்த சமயம் அப்பாவைப் பார்ப்பேன்....

என்னைப் பாத்து “ நீ அந்த ராசாவின் மகனா .....” என கேட்பார்கள்... என்னிடம் அருணாசலம்கிற ஆசிரியர் அப்பாவை தேயிலை வாங்கி வரச் சொல்ல சொல்வார்..... நான் சொல்ல மாட்டேன்... நானே வாங்கிக் கொடுத்திருவேன்...

மற்ற மாணவர்கள் அப்பா போவதைப் பாத்து ,” அது யார் தெரியுமா.... நந்தினியோட வருங்கால மாமனார்...”... இது அவள் காதிலும் விழும்... அப்போ அவள் என்ன நினைச்சா என்று எனக்குத் தெரியாது.... ஆனால் அவள் எனக்கு வேண்டாம்.....படித்தேன்.... படித்தேன்... முதுகலைப் பட்டமும் படித்து தமிழ் நாடு பப்ளிக் செர்வீஸ் கமிஸ்ஸன் செகண்ட் குரூப் தேர்வு எழுதினேன். இன்று நான் மிக உயர்ந்த பதவியில் இருக்கேன்..... கோடீஸ்வரி எனக்கு மனைவியானாள்..... ஆரம்பத்தில் சண்டை சச்சரவெல்லாம் உண்டு.... என் மனைவி நான் சொன்னதைக் கேட்காவிட்டால் என் மனம் அமைதி இழந்து விடும்.... நான் என் குடிசையில் போய் என் அப்பாவின் அருகே போய் அழுவேன்.....என் அம்மா மரணத்திற்குப்பின் அப்பாதான் எனக்கு அம்மா...
 ஏன்பா..... எனக்கு பணக்காரப் பொண்ணை கட்டி வச்சேனு அழுவேன்..... என்னை சமாதானப்படுத்துவார். என்னிடம் மன்னிப்பு கேட்க என் மனைவி வருவா.... அதன் பிறகுதான் எனது பெரிய வீட்டுக்குப் போவேன்.

ஒரு சமுதாயப் பிரச்சினைக்கு தீர்வு காண நான் படித்த அதே கல்லூரிக்குப் போனேன். ஏற்கனவே அங்கே கல்லூரிப் பாதுகாப்புக்கு நின்ற போலிஸ் உயர் அதிகாரிகள் எனக்கு மரியாதை கொடுத்ததையும் என் பேராசிரியர்களே எழுந்து நின்று வரவேற்ற காட்சியையும்  தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த எனது தந்தையின் பிரகாசமான முகத்தைக் கண்டு என் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. என்னை வரவேற்றுப் பேசிய பேராசிரியர், எப்பவும் ராசாவின் மகன் என்றே அழைத்துப் பழக்கப்பட்ட அதே அருணாசலம் சார் என் பெயர் சொல்வதில் திணறியதைக் கண்டேன்.
நான் பேசும் முன் நான் என் அப்பாவை வணங்கி அதன் பிறகு பேசினேன்.

வள்ளுவர் வாக்கு...... நானே உதாரணம்......

தம்பி பெருமாள் ..!  கடவுளைக் கும்பிடணும்னு நான் சொல்ல மாட்டேன்.... அப்பா.... அம்மாவைக் கும்பிடணும்.....

இப்பவும் அலுவலகப்பணியிலும் சோதனைகள் வரும்..... மறைந்து போன அப்பாவை நினைப்பேன்..... நல்ல வழிகிடைக்கும்.

எனது மகன் என்னிடம் பேசுவான்.... நானும் பேசுவேன்.....அவன் முகத்தை நான் பார்க்கவே மாட்டேன்.... ஆனால் நீயும் அப்பாவும் நண்பர்கள் இருவர் பேசுவது போல இருந்தது.... எனக்கு மிக்க மகிழ்ச்சி..... முடிந்தால் என்றாவது எங்கேயாவது சந்திப்போம்.  உன் போண் எண்ணைச் சொல்... அவர் அதை டயல் செய்ய அவர் எண்ணும் என் மகன் செல்லிலும் பதிவானது....

நான் காலையில் கண் விழித்துப் பார்த்த போது அவர் இல்லை.

அந்த side lower பெர்த் நாகர்கோவில் வரை யாரும் பயன் படுத்தாமல் காலியாகவே இருந்தது....




Monday, December 16, 2013

என் மகன்களுடன் சென்னையில் ஒரு நாள்......

டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி காலையில் தினேஷ்  என்னிடம் வந்து அப்பா, “ நாளைக்கு நீங்க சென்னைக்குப் போகும் ரயிலில் எனக்கு டிக்கட் கிடைக்குமா ?” என்று கேட்டான்.
நான்,” அது எப்படி கிடைக்கும் ? அதுவும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல சான்ஸே இல்லை.தட்கல்ல வேணும்ணா  கிடைக்குமா என முயற்சிப்போம்...”

பத்து மணிக்கு மேல் தான் தட்கல் கிடைக்கும்.....  எதற்கும் முயற்சி செய்து பார்ப்போமே என IRCTC வலை தளத்திற்குள் புகுந்து தேட ஆரம்பித்தேன்.

 RAC 5 என அன்றைய தேதிக்கு இருக்கை அதுவும் செகண்ட் AC யில் இருந்ததைக் கண்டேன்.

எப்படியும் இருந்தாவது போகலாமே என நினைத்து e-ticket முன்பதிவு செய்து அச்சுப் பிரதியும் எடுத்தேன்.

அதன் பிறகு திரும்பி நாகர்கோவிலுக்கு 11ஆம் தேதி மாலை வர எந்த ரயிலிலும் முன் பதிவு செய்ய இயலவில்லை. உடந்தானே ஓசூரில் இருக்கும் என் மகன் முருகனிடம் சொல்லி பஸ்ஸில் டிக்கட் எடுக்கச் சொன்னான் தினேஷ்.

அவனும் மாலை 7.30 மணிக்கு ரதி மீனா பஸ்ஸில் ரிசர்வ் பண்ணிவிட்டான். அதனை அவன் எனக்கு அனுப்பி அச்சுப்பிரதியும் எடுத்துவிட்டோம்.

11-ஆம் தேதி மொபைல் போணில் PNR status பார்த்ததில் RAC 1 எனத் தெரிந்தது. இரண்டு மணிக்கூர் கழிந்து பார்த்ததில் படுக்கை உறுதி செய்யப்பட்டது தெரிந்தது.

Chart போட்டபின் பார்த்ததில் A2-18 ..... ஒரே ஆச்சரியம். எனக்கு A2-17 என்பதால்.

நான் தனியாய் அதுவும் கழிந்த ஒருவாரம் தலைவலி,.ஜலதோஷம், காதுவலியால் ENT Dr. விஜயராஜிடம் மருந்து சாப்பிட்டு வந்து குணமாகியும் குணமாகாமலும் இருந்ததால் சென்னைக்கு செல்வது என் மனைவிக்கு சற்று பயம் இருந்தது..... இப்போ மகனும் கூட வருவதால் அவளுக்குத் திருப்தி...

சென்னை சென்று எக்மோரில் இறங்கி ஒரு ஆட்டோவ்ல என் நண்பன் பப்பு வீட்டுக்குப் போகணும் என்று எண்ணியிருந்தேன்.

“மாமா.....” ஒரு குரல். அது வந்த திசையில் திரும்பிப் பார்த்தால் பப்புவின் மகன் ரமேஷ் நின்று கொண்டிருந்தான்.

அவன்  Call Taxi யில் எங்களையும் அவனது மாமியாரையும் அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு காலை உணவு உட்பட அனைத்தையும் முடிக்கவும் முருகன் கேசவன் காரில் வரவும் சரியாய் இருந்தது.

நம்ம வீடு வசந்தபவனில் நிச்சயதாம்பூல விழா.... அது எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் எதிர்பக்கம்.... மதுரவாயில்....பப்புவும் விழாவுக்கு எங்களுடன் வந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.

சாப்பாடு முடிந்ததும் ஆவடி ராம்ஜி வீடு, அம்பத்தூர் முருகன் வீடு, பாடியில் உறவினர் ஒருவர் வீடு என எல்லோர் வீட்டுக்கும் போய் வந்தது 3.30 மணிவரை நேரம் போய் விட்டது.  எனக்கு ரயில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்... அது 6.50 மணிக்கு....

 என்ன செய்ய....நேரம் போகணுமே.Grand Sweets கடைக்குப் போய் ரசப்பொடி,வத்தக்குழம்பு .... வாங்கிவிட்டு எக்மோருக்குப் போனோம்.

நான் தனியாக செல்வதில் முருகனுக்கு இஷ்டமே இல்லை.....

பிளாட்பாம் டிக்கட் எடுக்க தினேஸ் போனான்.....

  ‘அப்பா..... அந்த போர்ட பாத்தீங்களா.... ”இது முருகன் என்னிடம் சொன்னது....

சார்ட் தயாரிப்புக்குப்பின் முன் பதிவு செய்யும் இடம்  அது எனத் தெரிந்தது.

சற்றும் யோசிக்கவில்லை...... நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்ஸில் நாகர்கோவிலுக்கு டிக்கட் இருக்கா எனக் கவுண்டரில் இருந்தவரிடம் கேட்டான் முருகன்....

ஆம் .... செகண்ட் ஏசியில் ஒரு சீட் இருக்கு.

”எனக்கு வேணும்.....”

அந்த பாரத்தில் எழுதித் தா.....

அவசரம் அவசரமாய் எழுதினதில் நான்  train name-ல் தினேஸ் பெயரை எழுத, அப்பா..அப்பா... அது ட்ரயின் பேர் எழுதணும் அல்லது நம்பர் எழுதணும்...

அடுத்த பக்கம் தெளிவாய் எழுதிக் கொடுத்தான்.....

விலாசம் எழுதல்லையே என்றார்....

அதுவும் எழுதிக் கொடுத்தான்......

தேதி எழுதல்லையே என்றார்......

எப்படியோ ஒரு வழியாய் டிக்கட் தயாராக அவர் 1335 ருபாய் எனகேட்க நான் 1500 கொடுத்தேன்.

35 ருபாய் தாருங்கோ எனக் கேட்க முருகன் தயாராய் வைத்திருந்ததைக் கொடுக்க ஒருவழியாய் டிக்கட் கிடைத்தது...... மீண்டும் ஆச்சரியம்....  அதுவும் நான் பயணம் செய்யும் அதே கோச்.  எனக்கு 40 அவனுக்கு 46.....

தினேஷ் மூணு பிளாட்பாம் டிக்கட் எடுத்துக் கொண்டு வந்தான்.

அவனுக்கு டிக்கட் கிடைத்ததில் மகிழ்ச்சி..... அஞ்சு ருபா போச்சே என்றான்....

அது மட்டுமா போச்சு .... பஸ் டிக்கட் அந்தக் காசும் போச்சே என்றேன்....

அது போட்டும்பா.... அண்ணன் உங்ககூட வருவது எவ்வளவு வசதி....

ரயிலில் ஏறினோம்.... தினேஸ் உள்ளே இருந்தான்...

நான் வெளியே வந்து சார்ட்டில் என் பெயர் இருக்கா எனப் பார்த்துப் பெயர் கண்டதில் ஒரு திருப்தி.....

“ முருகா .... நீ போ...”

நீங்க முதல்ல உள்ள போங்கோ..

”என்னடே... நான் என்ன சின்னப் பையனா”...

அம்ம சொல்லி இருக்கா.... நீங்க எப்பவும் ரயிலவிட்டு கீழ இறங்கிதான் நிப்பீங்களாம்.....

சரிடெ....

நான் ரயிலில் ஏறினேன். முருகன் விடைபெற்றுச் சென்றான்....

ரயில் புறப்பட்டது. தினேஸ், “ எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்குப்பா....போகும்போதும் வரும்போதும் அருகருகே சீட் கிடைச்சது......” என்றான்......

எல்லாமே இறைவன் செயல்..... உள்ளதைச் சொல்.... நீ  என்னுடன் வந்தாயே....நீயாக வந்தாயா... அம்ம சொல்லி வந்தாயா....

“ நானாகத்தான் வந்தேன்...... விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் உங்களுக்காக ..... உங்களுக்காக மட்டுமே வந்தேன்பா..அம்மாவுக்கும் நான் உங்ககூட வந்ததில் ரொம்ப சந்தோசம்தான்....

  அப்பா ரயில விட்டுக் கீழே இறங்கி நிப்பா.பாத்துக்கோ என...போணில் சொல்லிக் கொண்டே இருந்தா.

என்னடா.... இது....நான் என்ன சின்னப் பையனா.......  ஆம்....வயது ஏற ஏற....

வாழ்வு வசந்தமாய் இருந்திட இந்த அனுபவத்தைவிட எனக்கு வேறென்ன வேண்டும்.

என் கைப்பிடித்து நடந்தார்கள் எப்பவோ..... இப்போ அவர்கள் கைப்பிடித்து நடப்பதில் எனக்கு இன்பமே......