Wednesday, January 25, 2012

கடுக்கரை கோட்டை வாசல்

 
Posted by Picasa

கடுக்கரையில் இருந்து காட்டுப்புதூர் செல்ல இன்று அழகான சாலை இருக்கிறது.சாலை இல்லா அந்த பழைய காலத்தில் அது ஒத்தையடிப்பாதையாய் வயல் வரப்பாய் இருந்தது. கடுக்கரை பழைய மகாத்மா காந்தி நூல்நிலையத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் தெரு வழியே வந்தால் ஊரின் கிழக்கற்றம் வரும். அதன்பிறகு வயல்களின் வரப்பு வழியாகத் தான் கீழக்கோயிலுக்கும், கோயில்குளத்துக்கும் செல்ல வேண்டும்.

ஊரில் உள்ள ஆடு மாடு வயல்களில் இறங்கி பயிர்களை தின்று விடாமல் இருப்பதற்காக தெரு முனையில் இரண்டு கல் நாட்டி அடைத்து வைத்திருந்தார்கள். ஆட்கள் மாத்திரமே செல்ல முடியும் அளவுக்கு இடைவெளி இருந்தது.அந்த இடத்தை “கவட்டை” என்று தான் எல்லோரும் சொல்வார்கள்.

காலங்கள் மாறியது. கடுக்கரை கே.எம். ஆறுமுகப்பெருமாள் பிள்ளை அவர்கள் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் போது கடுக்கரை- காட்டுப்புதூர் சாலை உருவானது. அந்தச் சாலைக்கு தலவர்,அவர் தங்கை மீனாட்சிதிரவியம் பிள்ளை, தம்பி கே. எம். மகாதேவன்பிள்ளை-இவர்களது வயல் பகுதிகள் சாலையாக மாறின. பஸ் போக்குவரத்து ஆரம்பமானது. அந்த குறிப்பிட்ட கவட்டைப் பகுதியில் பஸ் நிற்கும்.

பஸ்-க்காக காத்திருக்கும் மக்கள் மழை சமயத்தில் அந்த இடத்தில் நிற்க முடியாமல் சிரமப்பட்டதைப் பார்த்து கீழத்தெரு காந்தி அவர்களும் அவரது சகோதரர்களும் சகோதரியும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு Waiting Shed கட்டினார்கள். கட்டி முடிக்கப்பட்டு 22-4-1996-ல் அவர்களது சிறிய தந்தையார் தெரிசனம்கோப்பு அனந்தபத்மனாபபிள்ளையால் அந்த Waiting shed திறந்து வைக்கப்பட்டது.

“கவட்டை” என்ற பெயரை கடுக்கரை பொன்னப்பன்(ஆறுமுகப் பெருமாள்) கோட்டைவாசல் என்று மாற்றி இன்றும் அனைவராலும் அந்த இடம் கோட்டைவாசல் என அழைக்கப்படுகிறது.

பழைய அந்த புகைப்படத்தை தந்து உதவியது கடுக்கரை ராசப்பன் (Er.P.ArumugamPillai,Chairaman-Secretary,S.T.Hindu College,Nagercoil)

 
Posted by Picasa

Wednesday, January 18, 2012

என் வீட்டு வரவேற்பறையில் எம்ஜிஆரின் படம்....!

நேற்று திரைப்பட மறைந்த நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நாள்.Face book-ல் மணியம் செல்வம் ஓவியமாய் தீட்டிய எம்.ஜி ஆரின் படத்தைப் பார்த்தேன். அதே மாதிரி ஒரு படம் என் வீட்டு மேசையில் இருக்கிறது. அழகாக லேமினேட் செய்யப்பட்ட படம்.

என்வீட்டில் எந்த அரசியல்தலைவரின் படமும் கிடையாது. நடிகரின் படமும் இல்லை. சினிமா நடிகர்களைத் தெரியாத சிலர் என்னிடம் இந்த படத்தில் இருப்பவர் யார்? எனவும்..உங்க அண்ணனா எனக் கேட்டவர்களும் உண்டு.

என்னை விட வயதில் பெரியவர்கள் என்ன ஒரு College teacher-ன் வீட்டில் சினிமா நடிகரின் படமா என முகம் சுளித்தவர்கள் உண்டு. எங்க குடும்பத்தில் பலர் சிவாஜி கணேசனின் ரசிகர்கள். என் வீட்டில் இருக்கும் எம். ஜி.ஆரின் படத்தை அங்கிருந்து வேறு எங்காவது மறைவாக வைத்துவிட்டுப் போனவர்களும் உண்டு. என் மனைவியே அதை எடுத்து மறைத்து வைத்து விடுவாள். ஆனால் நான் திரும்பவும் அந்தப் படத்தை எடுத்து இருக்கும் இடத்தில் வைத்து விடுவேன்.

நானும் சிவாஜியின் நடிப்பை மிகவும் ரசிப்பேன். பாட்டுக்காக எம்ஜிஆர் படம் பார்ப்பேன். நான் பார்த்த உலகம் சுற்றும் வாலிபன் படம் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினேன். நான் ரசித்ததால் அது எனக்கு பிடித்த படமாய் இருந்ததால் அவ்வாறு பேசினேன். நான் பேசிய இடம் சென்னையில் உள்ள என் உறவினர் ஒருவரின் வீட்டில். அப்பொழுது அதனை ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஆட்டோ ட்ரைவர். பெயர் கேசவன். அவர் ஆங்கிலம் பேச விரும்பி இண்டியன் எக்ஸ்பிரஸ் படிக்கக் கூடியவர். நான் சென்னையில் இருக்கும் போதெல்லாம் அவருடைய ஆட்டோவில் தான் எல்லா இடங்களுக்கும் போவேன்.

2004-ல் எனது மகளின் திருமணவிழாவிற்கு கேசவனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தேன். சென்னையில் இருந்து அவ்வளவு தூரம் செலவு செய்து வருவார் என நினைக்கவே இல்லை. நான் சற்றும் எதிர் பார்க்காமல் வந்தார். அவர் சார்,“ உங்களுக்கு என் அன்பு பரிசு. கலர் ஸெராக்ஸ் எடுத்தேன் ரெண்டு . ஒன்றை நான் என் வீட்டில் வைத்திருக்கிறேன்.” என்று சொல்லி தந்த படம் தான் எம்ஜிஆர் போட்டொ.

கேசவனின் அன்பினை மதிப்பதற்காக இன்றும் என் வீட்டு Hall-ஐ அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.எத்தனை கோடி உள்ளங்களில் வாழ்ந்து வருகிறார் எம்ஜிஆர்,அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் .

எனக்கு அவரையும் பிடிக்கும்.

Monday, January 16, 2012

கடுக்கரை வடக்கு வாச்செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 
Posted by Picasa

 
Posted by Picasa



கடுக்கரை ஒரு மலையோர கிராமம்.குமரி மாவட்டத்தில் நாஞ்சில்
நாட்டிற்கு நல்லோர் பலரைத் தந்து பெருமை பெற்ற கிராமம்.
காடுகளும் மலைகளுடன் ஆறுகளும் நிறைந்த ஊர்
கஞ்சியாறும் நல்லாறும் வலம் வந்தோடும் கரையோரமாய்
பச்சைக் கம்பளம் விரித்தால் போல் காணும் இடமெல்லாம்
வாழையும் தென்னையும் நெற்பயிர்-வயல் வெளியும்
காட்சி தரும் அழகான அமைதியான கிராமம்.

எல்லா ஊரையும் காத்திடும் எல்லையம்மன் போல்
எம்மூரைக் காத்திட தெற்கெல்லையில் முத்தாரம்மன்
வட எல்லையில் வாஞ்சையுடன் வாசமிருக்கும் செல்லியம்மன்
காத்திடுவாள் தினமும் அன்னை போல.

செல்லியம்மன் சிலையில் பங்கமென அறிந்து பதறிய
நல்லமனங்கொண்ட ராசப்பன் எனும் ஆறுமுகம்பிள்ளை
பாசமுடன் நேசமாய் சிலைதனை மாற்றிட முன் வந்ததால்
ஊர்கூடி முடிவெடுத்தது கும்பாபிஷேகமும் நடத்திட
திருப்பணிக் குழு உதயமாகி கீழத்தெரு காந்தி அதற்குத்
தலைவருமாகி உதவியாய் ஜெயச்சந்திரன் செயலாளராகி
இராஜேந்திரன் என்ற ஆறுமுகம் பிள்ளை பொருளாளருமாகி
முழுமூச்சுடன் தன் பணிதனைத் துவங்கியது.

ஊர்கூடித் தேர் இழுப்பது போல் நற்பணி செய்யும்
திருப்பணிக்குழுவுக்கு தோள் கொடுத்து உதவினர் ஊர்மக்கள்.
ஊர்முழுக்க உணர்ச்சியாய் உற்சாகமாய் ஊக்கம் கொடுத்தனர்.
கோபுரம் இல்லாக் கோவில் என்ற நிலை மாறி இன்று
கோபுரத்துடன் அம்மன் கோவில் பிரமாணடமாய் காட்சி
தருவது கோவிலின் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் இருக்கிறது.
காண்போரெல்லாம் கண்டு மகிழ்ந்து வியப்புற்று
தன்னை மறந்து வணங்கிப் பாராட்டுகிறார்கள்.

கோபுர தரிசனம் கோடிப் புண்ணியமாமே
தரிசனத்துக்கு கோபுரமே தந்த சித்திரை
தாமோதரன் என்ற சுப்பிரமணியபிள்ளைதம் குடும்பத்துக்கு
எத்தனை புண்ணியமோ.... அந்த உத்தமருக்கு
அத்தனையும் அள்ளிக் கொடுப்பாள் அன்னை.

ஓயாது உழைத்திட்ட கோவில் திருப்பணிக் குழுவுக்கு
தாராளமாய் நிதிதனை அள்ளிக் கொடுத்த ஊராரால்
கோபுரத்துடன் வடக்குவாசெல்லி அம்மன் கோவில்
பேரழகாய் காட்சி தருவதைக் காணக் கண் கோடி வேண்டும்
அதுவும் குறைந்த நாட்களில் நிறைவாய் முடிந்ததும்
அன்னையவள் அருளால் தானே....

புதுப் பொலிவுடன் திகழும் வடக்கு வாசலும்
தெற்கு வாசலும் பக்த பெருமக்களை
வா...வா...என்றழைத்து அருள் பெற்றுச்
செல்லுங்கள் என வரவேற்கின்றன

கும்பாபிஷேக நாளாம் தை மாதம் பதினைந்தில்
வருகை தந்து,அன்னையவள் தரும் அருளுடன்
விருந்தினையும் அருந்திச் செல்லுமாறு
திருப்பணிக்குழு அன்பாய் அழைக்கிறது.....

Friday, January 13, 2012

வேகம் விவேகம் அல்ல

திருவண்ணாமலைக்கு நாங்கள் நாகர்கோவிலில் இருந்து வாடகை காரில் காலை 9 மணியளவில் புறப்பட்டு பயணம் செய்து கொண்டிருந்தோம். ட்ரைவர் 80 அல்லது 90 கிலோமீட்டர் வேகத்தில் மிக கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தார்.

எங்களுடன் வந்தவர்களில் ஒருவருக்கு இதை விட வேகமாகப் போனால் தானே அண்ணாமலை சாமியை கோவிலினுள் சென்று கும்பிட முடியும். 9 மணிக்கு கோவில் நடையை அடைத்து விடுவார்களே என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

சிவனைக் கும்பிடணுமா ?  சிவனடியை அடையணுமா ?  இந்த வேகத்தில் போனால் போதும்  நாம் நிச்சயமாய் சிவனை தரிசிக்கலாம் என்று சொல்லி ஆணுக்கு அழகு அதிக வேகமல்ல  என்பதுபோல் நிதானமாகவே வண்டியை  ஒட்டி சென்றார்.

 இப்போ நடப்பது பாதுகாப்பு வாரம். ஒவ்வொரு ஊரிலும் வேகம் விவேகம் அல்ல என்ற அறிவிப்புகளும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடந்து கொண்டிருந்தன

"Accidents bring tears...... Safety brings cheers......" is the theme of  Road safety Week Seminar organised by the City Police  Commisionarate and Transport Offices of Madurai.

வழியில் பல கார்கள் அடிபட்டும் இடிபட்டும் பள்ளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்தோம். அந்த விபத்துகளால் எத்தனை பேரின் வாழ்க்கை கேள்விக் குறியானதோ....... இதனை பார்த்தும் பாக்காமல் போகும் நம் மனம்...... என்ன செய்வது?.....

இப்பமெல்லாம் விபத்து நடந்த இடத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தால் ,விபத்து சம்மந்தப்பட்ட வழக்குக்கு, உதவி செய்தவர்களை போலீசாரால் அழைக்க முடியாது என்று ஒரு சட்டம் இருக்கு என விகடனில் (21-11 -2011) படித்தது ஞாபகத்துக்கு வந்தது .

மொபைல் போன்-ல் In Case  of  Emergency  என நமது நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் எண்ணை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம் .

சென்னையில் உள்ளவர்கள்களுக்கு விபத்து ஏற்பட்டால்  உதவி செய்ய  'அலெர்ட்' என்ற அமைப்பு இருக்கிறது .அதனிடம் தொடர்பு கொள்ள :9944066002.

Thursday, January 12, 2012

திருவண்ணாமலை -கிரிவல நாளில் நாங்கள்

நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஜனுவரி மாதம் கிரிவல நாளில் திருவண்ணாமலைக்குப் போய் மலையைச் சுற்றி,நடக்க வேண்டும் என எண்ணினோம். பஸ்ஸில் போகலாமா அல்லது ரயிலில் போகலாமா ?  ஒரு வேன் பிடித்துப் போகலாமா ? எப்படிப் போவது ?

வேன் பிடித்துப் போகலாம் என்று முடிவானது. அகிலம் ட்றாவல்ஸ் -ல் போய் விசாரித்ததில் உங்களுக்கு எந்த வண்டி வேணும்? எத்தனை பேர் போறீங்க ? எனக் கேட்டார்கள் . எத்தனை பேர் என சொன்னதும் டெம்போ traveller வசதியாய் இருக்கும் என்று சொன்னார்கள் .

ஒருகிலோ மீட்டருக்கு 14  ரூபாய் என்று சொன்னவர்கள் 13 .50  க்கு சம்மதித்தார்கள் ( A.C  வண்டி ) .


எங்கள் பயணம் ஜனுவரி மாதம் 7  சனிக்கிழமை காலை 8 .30  மணிக்கு  துவங்கியது. டிரைவர் பெயர் C .T .குமார் @ துரை.

நாங்கள் திருச்சி வரை போய் அங்கிருந்து சென்னை சாலையில் உடுமலைப்பேட்டை க்கு பத்து கிலோ மீட்டருக்கு முன்னால் ஒரு மேம்பாலத்தின் அடிப்பக்கம் உள்ள இடது கைப் பக்கம் உள்ள சாலை வழியாய் போனோம்.

திருவண்ணாமலை செல்லும் வழி என அறிவிப்புப் பலகை எதுவம் இல்லை.வழியில் நின்ற போலிசிடம் கேட்டு உறுதி செய்தபின் தான் போனோம் .
 அன்னை சாரதா மடம் இடது பக்கத்திலும் வலது பக்கத்தில் அன்னை சாரதா கலைக்கல்லூரி இருப்பதுதான் நாம் திருவண்ணாமலைக்கு இடது பக்கமாக  செல்ல அடையாள இடமாகக் கொள்ள வேண்டும்.

திருக்கோயிலூர் போகாமலே திருவண்ணாமலைக்குப் போய் விடலாம். நாகர்கோவிலில் இருந்து 570.5 km தூரம்.

நாங்கள் போன நாள் கிரிவல  நாள்  ஆதலால் தங்குவதற்கு அறைகள் கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனாலும் நண்பர்கள் வித்தியாசாகர், ராஜமாணிக்கம் உதவியினால் நல்ல வசதியான ஒரு ஹால் கிடைத்தது . அது நண்பர் ராஜமாணிக்கத்தின் சொந்த வீடு.

 நாங்கள் 13 பேரும் சென்னையில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் வந்த 6 பேர்களும் வசதியாக இரண்டு நாட்கள் தங்கி 9-ம் தேதி காலையில் புறப்பட்டு மாலையில் 6 மணிக்கு நாகர்கோவில் வந்து சேர்ந்தோம்

 8 -ம் தேதி மாலையில் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் நடந்தோம் .

சுகமான யாத்திரை.

1162 km  என கணக்கு பார்த்து ,டிரைவர் பேட்டா 600 ரூபாய் என 16100 /- வேனுக்கு செலவு ஆனது .மற்றபடியான செலவு toll க்கும் சேர்த்து 6378 ரூபாய் ......நாங்கள் 13  பேர் போனோம் .ஒரு ஆளுக்கு 1730 /- ரூபாய் .


Toll  செலவு விவரம் :-


நாங்குநேரி (65 +65 ),SPUDHUR(கயத்தார் பக்கம் )( 40 +40 ) ,ETURVATM (40 +40 ) ,மதுரை Corporation ( 75 +75  ) , Chittampatti (50 +50 ),பூத்குடி (50 +50 ),சமயபுரம் (35 +35 ),
திருமன்துறை (40 +40 )......Total :- 790 /-






Wednesday, January 11, 2012

பசுவின் பால் குடிக்கலாமா...?

சின்ன வயதில் இருந்து வயதான இந்நாள் வரை பசும்பால் குடித்தே பழக்கப்பட்டதால் பால் மனிதனுக்குத் தேவையான ஒரு உணவு என மனதில் பதிந்து விட்டது.

நாத்திகர்கள் ,“அழும் பிள்ளைக்கு பாலில்லை.கல்லுக்கு பாலை பாய்ச்சுவது மாபாதகச் செயல்” என்று சொல்வர்.பால் மனிதனின் சத்தான உணவல்லவா அதனால்தானே அவ்வாறு சொல்கிறார்கள் என நினைத்ததுண்டு.

வெண்மைப் புரட்சியில் வெற்றி பெற்ற நாடு நம் நாடல்லவா!....

காலை எழுந்ததும் பால் வரத்தாமதமானால் ஏற்படும் எரிச்சல், குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க கால் கடுக்க நடந்து போய் வாங்குவது எல்லாமே பழகிப் போன விசயங்கள்.

இப்படிப்பட்ட மன நிலையில் உள்ள நான் ஆங்கிலப் பத்திரிகையில் பால் ஒரு மோசமான உணவு, மனிதன் சாப்பிடவே கூடாத உணவு எனப் படித்தேன்.

படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன்

இத்தனை காலமும் குடித்த எனக்கு மோசமான் விளைவுகள் என்று எதுவுமே இல்லையே......அது ஏன் மோசமான உணவு ?.....சாப்பிடவே கூடாதா?

பாலில் உள்ள மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு வித ஹார்மோனை இரத்தத்தில் இருந்து அழகாகவும் மிக விரைவாகவும் நீககி விடுகிறது கல்லீரல்.அதனால் நாம் காப்பாற்றப் படுகிறோம்.

பசுங்கன்றுகள் வேகமாக வளர்வதற்காக பசு தரும் உணவுதான் பால்.

பால் இரத்தக் குழாயான பெருந்தமனி தடிப்பு அதாவது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.

ஆடையில்லாத பால்,குறைந்த கொழுப்பு பால் கூட ஆரோக்கியமற்ற உணவுதான்.கொழுப்பற்ற பாலும்,பாலில் உள்ள கார்போஹைட்ரேட்டும் இதய நோய்க்கு அதிக காரணமாய் இருக்கிறது.

பாலில் உள்ள புரதச்சத்து (Protein) ஆரோக்கியமானதல்ல.

நாம் உண்ணும் பாலில் உள்ள அளவு animal estrogen harmones தான் இருதய நோய்க்கும் மாரடைப்புக்கும் அதிக காரணமாய் இருக்கிறது.

பாலில் உள்ள lactose (sugar) இருதயத்துக்கான இரத்தக்குழாயில் அதிக கேல்சியத்தை படிய வைக்கிறது.
மனநோய், நீரழிவு நோய்க்கு பால் அருந்துவதும் காரணமாய் இருக்கிறது.

Milk may promote prostate and testicular cancer.

World Health Organisatition சமீபத்தில் வெளியிட்ட தகவல் , ‘இரத்தக் குழாய் சம்மந்தப்பட்ட இறப்புக்கும் மனிதன் சாப்பிடும் உணவுக்கும் தொடர்பான நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்ததில் பாலின் புரதச்சத்துதான் அதற்கு அதிக காரணமாய் இருந்திருக்கிறது’.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒன்றே சிறந்த சத்தான உணவு

 "Doubts Over World's Most Popular Health Drink",The New Sunday Express Magszine dated 8-1-2012. Dr. Ramkumar, accupuncturist, Sir Ganga Ram Hospital, New Delhi. -ல் படித்தது .

Wednesday, January 4, 2012

வீடு கட்டியது இன்னொருவரின் மனையில்....

நானும் ராமுவும் எனது நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டு விழா  ஒன்றுக்குப் போனோம்.விழா துவங்க சற்று நேரம் ஆனது . நாங்கள் சும்மா பலவிசயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம் .


ராமுவிடம் துவாரகா நகரில் ஒருவர் விடுகட்ட பூஜை போட்டபின் வேலையும் ஆரம்பித்தபின் , அந்த மனை அடுத்தவர் மனை எனத் தெரிந்து நொந்து போன  விசயத்தைக் கூறினேன் .


ராமு என்னிடம் ,' சார், இதை விட இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சொல்லட்டுமா ......எனது அண்ணன் ரவி வெண்ணாங்குப்பட்டு என்ற ஊரில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் வேலை பார்க்கிறான் .அவன் என்னிடம் சொன்ன விஷயம் ..."


திண்டிவனத்திற்கும் மரக்காணம் என்ற ஊருக்கும் இடையில் ஷூளம்பேடு  ரோடில் இரண்டு லேயவுட் I -ம் 2 -ம் உண்டு . அந்த இடத்தில் இருவர் மனை வாங்கினார்கள் .ஒருவர்  வாங்கிய மனையின் எண்ணும் இன்னொருவர் வாங்கிய மனையின் எண்ணும் ஒரே எண்.ஆனால் லேயவுட் வேறு.... இருவருமே வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் .580 சதுர அடி மனை .


இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்துகொண்டே தன் உறவினர்  ஒருவரின் உதவியோடு தனது வீட்டைக் கட்டினார். வருடங்கள் சில கழிந்தன.

இன்னொருவர் வீடு கட்ட தனது மனையை வந்து பார்த்தார். லேயவுட்டில் உள்ளது போல் அவர் பார்த்துக் கொண்டே வரும்போது தன் மனையில் கட்டி முடிக்கப்பட்ட விடு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வீடைத் தவறுதலாக அடுத்தவரின் மனையில் வீடு கட்டினது அப்போதுதான் தெரியவந்தது.

இனிமேல் என்ன செய்வது ?.தவறு நடந்து விட்டது.... வீட்டுவரி, மின் இணைப்பு... இவையெல்லாம் எப்படி கிடைத்தது ?

நல்லவர்கள் சிலரின் ஆலோசனைப்படி அவ்ர்கள் இருவரும் பரஸ்பரம் மனையை மாற்றி பத்திரம் பதிவு செய்தனர். பிரச்சினை அத்தோடு முடிந்தது.

நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம் தான் என ராமு கூறுகிறார்.

Tuesday, January 3, 2012

கடுக்கரையும் வெள்ளிமலை சாமியாரும்

ஒவ்வொரு ஆண்டு ஜனுவரி 1-ஆம் தேதி காலையில் நாங்கள் ஒருவரின் வருகைக்காக காத்திருப்போம்

அவர் 6.30 மணிக்கு வருவார் தனது காரில். நான் அவரது கார் எஞ்சின் சப்தம் கேட்ட உடனேயே வாசலுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி வரவேற்பேன். அவர் மறவாமல் கேக் தருவார். வீட்டினுள் வந்து எங்களது பிள்ளைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு நலம் விசாரிப்பார். இது கழிந்த 26 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் ஒரு நிகழ்ச்சி.

இந்த வருடமும் அவர் வந்தார் தனது காரில். அவர் ஒரு டாக்ஸி ஓட்டுநர். அவரது பெயர் பெனெடிக்ட்.அவர் மதத்தால் ஜீசஸ்ஸின் பக்தர்.

வெள்ளிமலைக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கும் போகலாம் என்று சொன்னேன். ராமு எனது காருக்குப் பதிலாக புஸ்கலா நடேஷின் காரை ஒட்டி வந்தார்.

இரண்டு காரிலும் நாங்கள் புறப்படத் தயாராகும்போது பெனெடிக்ட் என்னிடம், ”சார், நாம் முதல்ல பக்கத்தில் உள்ள கேம்ப் பிள்ளயார் கோவிலுக்குப் போய்விட்டுப் போகலாம்” என்றார்.

அதன்படியே பயணம் ஆரம்பமானது.

மண்டைக்காடு அம்மன் கோவிலுக்கும் ,வெள்ளிமலைக்குப் போய் முருகன் கோவிலுக்கும் போன பின் வெள்ளிமலை ஸ்ரீ விவேகானந்தர் ஆஸ்ரமத்திற்குப் போனோம்.

இந்த ஆஸ்ரமத்தை நிறுவியவர் ஸ்ரீமத் அம்பானந்த சுவாமிகள்.அவரது இயற்பெயர் மதுரநாயகம் பிள்ளை. இவரது சிஸ்யரின் பெயர் சுவாமி மதுரானந்தர். இப்பொழுது ஆஸ்ரமத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி.

அம்பானந்த சுவாமிகள் கடுக்கரையில் 1951 மே மாதம் மகா சமாதியானார். அவரது திரு உடல் கடுக்கரை K.C.பெருமாள் பிள்ளையின் பார்வத்திகாரர் பங்களாவில் கிடத்தப் பெற்றிருந்தது. அவரது திரு உடல் கடுக்கரை திடல் என்னும் ஊரில் தகனம் செய்யப்பட்டது. சமாதி இடத்தில் ஒரு ஓங்கார பீடமும் அதைச் சுற்றி மதில் கட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ரமத்திலுள்ள சாப்பாட்டு அறையில் வைத்து நாங்கள் கொண்டுபோன காலை சிற்றுண்டியை அருந்தினோம் . கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புஸ்தகத்தினை வாங்கினேன். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம்.

பெனெடிக்ட் எங்களிடம் டாக்ஸிக்கான கட்டணத்தினை பெற்றுக்கொண்டு நன்றி சொல்லி விடை பெற்றார்.

ஒரு கிறிஸ்தவர் வருட ஆரம்பத்தில் பெற்றுக்கொள்ளும் முதல் வருமானம் ,எந்த அரசியல் தலைவனுமில்லாத சாதாரண கல்லூரி ஆசிரியரான சாமானியமான ஒரு இந்து வான என்னிடம் இருந்துதான்.

எங்கள் முன்னால் சாஸ்டாங்கமாய் விழுந்து கால்களைத் தொட்டு வணங்கி விட்டுப் போனதும்
அவர் எங்களைப் பற்றி சொன்ன நல்ல சொற்களும் எங்களை திக்கு முக்காடச் செய்து விட்டது.

”இறைவா,என்றும் எல்லோருக்கும் நல்லவனாக இருக்கும் மனதினைத் தா”....இதுதான் எனது இந்த வருட பிரார்த்தனை.