Sunday, February 26, 2012

பேராசிரியர் ஒருவரின் கானல் நீராய்ப் போன ஆசை

பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை என்னுடன் ஒருநாள் பேசிக்கொண்டிருந்த போது அவருடைய அனுபவம் ஒன்றினை ,தான் ஒரு பெரிய தமிழ்நாடே போற்றும் எழுத்தாளரை அவர் வீட்டிலேயே சந்தித்து பேசியதை சொன்னார்.

ஆறுமுகம் பிள்ளை சுந்தரம் ராமசாமியின் நெருங்கிய நண்பர்,பொன்னீலனின் மாணவர்,நாஞ்சில் நாடனுக்கும் தெரிந்தவர்,ஜெய மோகனையும் அறிந்தவர்......
அவர் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்க விரும்புபவர். நான் நாவல்களை ஓரளவு படித்திருக்கிறேன் என்றால் அதற்கு அவரே காரணம் .

அவர் ஆனந்தவிகடனில் அந்த எழுத்தாளரின் எழுத்துக்களைப் படித்து நாட்கள் பல ஆன பின் அவருடைய புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படித்த போது,அந்த நாவலாசிரியரின் முகவரியைப் பார்த்திருக்கிறார். பார்த்ததும் அவர் இருக்கும் இடம் தன் மகள் இருக்கும் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடமல்லவா ......எப்போதாவது இனிமேல் போனால் எப்படியும் அந்த எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

2005 -ம் வருடத்தில் ஏதோ ஒரு நாள் ........ 

ஈக்காடுதங்கல்-க்கு தன் மகளின் வீட்டுக்கு ஒருதடவை போனார் ......காலையில் நடந்து போகும்போது ஒரு தெருவில் அவரது பெயரை பார்த்தார். 

உடன்தானே காலிங் பெல்லை அழுத்த ,ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

அவர் தான் அந்த பிரபல எழுத்தாளர்.

அவர் ," யார் நீங்க , உங்களுக்கு என்ன வேணும் ."  கேட்டார்.

ஆறுமுகம்பிள்ளை ," நான் உங்க கதை எல்லாம் படித்திருக்கேன் . உங்களை பாக்கத்தான் வந்திருக்கேன் ." என சொன்னார் .

அவர்," நீங்க appointment ஒண்ணும் வாங்காம திடீர்னு வந்திருக்கீங்க ..."


என் மகள் வீடு இங்க பக்கத்தில தான் .உங்க பேரப் பாத்துக்கிட்டு தான் வந்தேன்.

ஒரு நாவலின் பெயரை சொல்லி ,"நான் இந்த நாவலை விகடனில் படித்தேன் ... பிரம்மாதமாக இருந்தது .....நான் ஓய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர்." என்று
கூறினார் .மேலும் தன் எழுத்தாள நண்பர்களின் பெயர்களையும் கூறிவிட்டு நான்
இன்னொரு நாள் வருகிறேன் என்று வெளியே போகத் தயாரான போது அவர் ," வாருங்கள் உட்காருங்கள் "என வரவேற்றார் .

ஆறுமுகம் பிள்ளையும் அந்த எழுத்தாளரும் முப்பந்தைந்து நிமிடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆறுமுகம் பிள்ளையின் பேசுகின்ற பாணி எழுத்தாளருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

எழுத்தாளர் அவரிடம் ," நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள் .....அழகாக கேள்வியும் கேட்கிறீர்கள் ...... பேட்டி எடுக்க உங்களிடம் திறமை இருக்கிறது " என்றார் .

மேலும் ," நீங்க பிரபலமான ஆட்களை சந்தித்து பேட்டி எடுக்க கேட்டுக்கொண்டால் சம்மதிப்பீர்களா "

" யாரிடம் ......"

"பழைய சினிமா நடிகர் நடிகைகளிடம் ....... "

"எந்த நடிகர் ?"

"பத்மினி,சரோஜாதேவி,ஜெமினிகணேசன் .........."

"ஐயோ ...! அவங்கள்ளாம் ரொம்ப பெரிய நடிகர்கள் ......"

"அப்படி ஒண்ணும் நினைத்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் .....இப்போது நீங்கள் பேட்டி எடுக்கப் போனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் ."

பேராசிரியர் முழு மனதுடன் சம்மதித்து தனது மொபைல் போண் எண்ணைக் கொடுத்து விட்டு வந்தார்.

பிரபலமான பழைய நடிகையிடம் சந்தித்து பேட்டி காணும் நாளை ஆவலோடு
எதிர்பார்த்துக் காத்திருந்தார் பேராசிரியர்.

சென்னையில் இருக்கும் வரை யாரும் அவரை பேட்டி எடுக்க வரும்படி  அழைக்க வில்லை.

ஒருநாள் கடுக்கரையில் சும்மா நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது சிணுங்கிய போணை எடுத்து காதில் வைத்தார் பேராசிரியர் .

"Am I talking to Professor Arumukam Pillai....." ஆண்மை கலந்த  பெண்ணின் குரல் .....American English.

" May I know who you are......."

" I am Padmini"

பத்மினி ," நீங்க பேட்டி எடுக்க வருவதாக எழுத்தாள நண்பர் ....... சொன்னார். எப்பொழுது வருவீர்கள் "

நான் என் மகள் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு தெரிவித்து விட்டு வருகிறேன் என்று ஆறுமுகம் பிள்ளை சொன்னார்.

பத்மினி ." உங்களுக்கு நாட்டிய சாஸ்திரம் தெரியுமா ?......"

அவர், " எனக்கு உங்கள் நாட்டியம் தான் சாஸ்திரம் ....நீங்க நடனமாடும்போது கால்கள் தரையில் படுகிறதா ,பட வில்லையா என்று கூட காண முடியாத அளவுக்கு காண்பதற்கு ரம்மியமாக இருக்கும் ........நீங்கள் வேடனாக பாவனை செய்யும் போது எய்யும் அம்பு போல் காட்சி தருவீர்கள் ...."

பத்மினி ," நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க .......சீக்கிரம் வாருங்க..."

அவர்," எனக்கு இப்போ வயது .....எங்க சின்ன வயதில் நீங்க தானே திரையுலக கனவுகன்னி ......"

பத்மினி,"  நீங்க எந்தக் கேள்வியானாலும் கேளுங்க .ஆனால் சிவாஜி கணேசனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி எதுவும் கேட்கவேண்டாம் .....அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லி சொல்லி எனக்கே மடுத்து விட்டது ........நீங்க சென்னை வரும்போது என் வீட்டுக்கு வந்து பேட்டி எடுக்க மறந்து விடாதீர்கள் ..."

அவர்," I am very much interested in meeting with you for the Interview.."

பேராசிரியர் சென்னை சென்ற போது பத்மினி சென்னையில் இல்லை...

இது போல் மூன்று தடவை முயன்றும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை

பேட்டி எடுக்கும் நாள் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது ......

செப்டெம்பர் மாதம் 23 -ஆம் தேதி கலைஞர் கருணாநிதியைப் பாராட்டும் நிகழ்ச்சியில் பத்மினி கலந்து கொண்டவிவரத்தைப் பேப்பரில் பார்த்த பேராசிரியர் ,பத்மினியை பேட்டி காண சென்னை செல்ல திட்டமிடுகிறார்.

ஆனால் மிகவும் ஆசைப்பட்ட பேட்டிதனை  எடுக்க முடியாமல் விதி தடுத்து விட்டது .

திட்டமும் தவிடு பொடியாகி விடுகிறது ........

காலன் கவர்ந்து சென்று விட்டான் அந்த நாட்டிய பேரொளியை ...

ஆம் .... பத்மினி மறைந்தாள்......

அந்த நாள்  ....செப்டெம்பர் 25 ,2006 (வயது 74 )

பேட்டி எடுக்க நினைத்தது கானல் நீராகி விட்டதே ........

முதலில் பேட்டி காண நினைத்த  ஜெமினி கணேசனும் மறைந்தார்......

இப்போ பத்மினியும் போய்விட்டாள்

இனி யாரையும் பேட்டி காண நினைக்கவே  வேண்டாம் என முடிவெடுத்ததாக சொன்னார் பேராசிரியர் ஆறுமுகம் பிள்ளை.   

No comments:

Post a Comment