Monday, October 14, 2013

சரஸ்வதி பூஜைநாளில் நான் சந்தித்த ஒருவர்.......

காலையில் அதுவும் அதிகாலையில் கண்விழித்தேன்.  அதன்பிறகு தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தேன்.

நேற்று சரஸ்வதிபூஜை..... கடலை, பொரி........இரவுச் சாப்பாட்டுக்கு விடுமுறை......

 நாலு மாதமாக ஜெயமோகன் எழுதிய அறம் கதைபுக்கை படிக்க எண்ணி எழுந்தேன். முகம் கழுவியபின் என் இருக்கையில் இருந்து மேசையில் இருந்த புத்தகத்தைத் தேடினேன்..... யாரோ அதை படிக்க எடுத்திருக்கிரார்கள்.....

 என்ன செய்ய  ..... இருக்கவே இருக்கிறது

கணினி. தூங்கிக் கொண்டிருந்த கணினியை ஒளியேற்றினேன்.

என் பக்கம், வரிகளைத் தாங்கத் தயாராய் வெண்மையாய் எனை பார்த்துக் கொண்டிருந்தது..

என்ன எழுத...... ?எதை வேண்டுமானாலும் எழுதலாமா...?

யோசித்துக் கொண்டிருந்தேன்.... ஆங்க்..... ஞாபகம் வருதே.

நேற்றுக் காலையில் நான் வீட்டில் இருந்த போது ஒரு நண்பர் வந்தார்.

“நல்லா இருக்கீங்களா”  கேட்டுக் கொண்டே வந்தார். அவர் குரல் ஆரோக்கியமற்று இருந்தது. அவர் தேக நலம் குன்றி இருந்தார்.

என்ன விசயமாய் வந்தீங்க என நான் கேட்காமலேயே எதற்கு வந்திருக்கிறார் என்பதனை புரிந்து கொண்டேன்.  அதற்குக் காரணம் அவர் கையில் இருந்த ரசீது புக்கும் நோட்டீசும் தான்.  வாடகைக் கார் ஓட்டும் அவர் வேட்டாளி அம்மன் கோயில் பக்கம் உள்ள ஆட்டொ ஸ்டேண்டில் ஆண்டுதோறும் நடக்கும் சரஸ்வதி பூஜை விழாவுக்கு வேண்டி ருபாய் கேட்கவே வந்தார்.

”நாலைந்து வருடமாகவே நீங்கள் வருவது இல்லையே..” நான் கேட்டேன்

”கழிந்த வருடம் நானும் சேர்ந்து கொண்டேன்.  ஆனா உங்களைப் பார்க்க வரல்ல.”

 “நான் மனதாலும் உடலாலும் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்லா..... உங்களுக்கும் தெரியும்லா.... எதிலும் பிடிப்பு இல்லாமல் வாழ்வே அஸ்தமித்து விடுமோ என்று கலங்கி இருந்த நாட்களில், என் சொந்தங்களே என்னைப் புழுவாய் பார்த்த காலங்களில் எனக்கு ஒரே ஆறுதலாய் இருந்த தலைவர் பெருமாள் ..... அவர் நடத்தும் விழா சிறப்பாய் நடக்கணும்கிறதுக்காக அவரோடு நானும் சேர்ந்து போக ஆரம்பித்தேன். இந்த வருடமும் அவருக்காக........”

”பணமும் பகட்டும் கொண்ட கனவுலகில் வாழும் என் உறவினரின் புறக்கணிப்பு என்னை எங்கோ துரத்தியது.  எனதருமை மகள் பெற்ற சிசுவை எடுக்கவோ பார்க்கவோ விரும்பாத அந்த உறவு இருந்தென்ன...... இல்லாமல் இருந்தென்ன.... வேண்டாம் . அந்த உறவே வேண்டாம்.  என் கடவுள் என்னைக் காப்பாற்றினார்.ஒரு கதவு மூடியது. பல கதவுகள் எனக்காக திறந்தது .”

மிகவும் நொந்து சொந்தக் கதையை என்னிடம் சொல்லி மனப்பாரத்தை இறக்கி வைத்தார்...

நான் கேட்டேன்........ நான் எத்தனை ருபாய் எழுத வேண்டுமென....?

“ எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நீங்க கொடுத்திருப்பீங்க. நாங்கள் இலவசமாக அரிசி கொடுக்கிறோம். உங்கள் பங்கும் இருக்கவேண்டும் என்ற  ஆசையில் தான் வந்திருக்கிறேன்...... ஒரு ருபாய் தந்தாலும் மகிழ்ச்சியே....”

விடைபெற்று போகும் போது அவர் என்னை வணங்கி,” உங்கள்ட்ட நான் போனில் பேசி அந்தக் குரல் கேட்டாலே அன்று எனக்கு ஆனந்தமாய் இருக்கும்” என்றார். அவர் கண்களில் தழும்பிய நீர்........

நானும் திகைத்து நின்று அவரை வழி அனுப்பி வைத்தேன்.......

அவர் யார்....?  இருபத்தைந்து வருடங்களாக ஒவ்வொரு ஆங்கில ஆண்டு தொடக்க ஜனுவரி முதல் தேதியன்று அவர் ஓட்டும் டாக்ஸியில் முதல் பயணிகளாக  நாங்கள் பயணிப்பது நடந்து கொண்டிருக்கிறது.....

கோயில்களுக்கு செல்வோம். எங்களுடன் அவரும் வருவார்......

அவர் பெயர் பெனடிக்ட்.  ஆம் அவர் பிறப்பால் வாழ்வால் ஒரு கிறிஸ்தவர்.
என்னைவிடவும்  அவர்தான் பெரியவர் என்று என் மனம் கூறிக்கொண்டே இருக்கிறது.............. 

No comments:

Post a Comment