Monday, October 14, 2013

அந்தநாள் இனிய நாள்.........

இன்ற விஜய தசமி.... பத்தாம் நாள்..... காலையில் பேப்பருக்காக காத்திருந்தேன்.... பேப்பர்காரன் போடல்லையே...

என் மனைவியை அழைத்தேன். பேப்பர் சரியாய் போட மாட்டாங்கானே.. போட்டாலும் எங்கோ தூக்கிப் போட்டு தண்ணியில் போடுகான். பாரு இண்ணைக்கு எவ்வளவு நேரம் ஆச்சு... இன்னமும் ஆளக் காணல்ல...நாள முதல் பேப்பரே போடாண்டாம்ணு சொல்லிரு.

இண்ணைக்கு பேப்பர் கிடையாதுங்க...... இது அவள்  சொன்னபிறகு தான் உறைத்தது.

போரடிக்குதே........ படிக்கும் மனப்பக்குவம் எங்கே போனது. நான் எழுதினா மற்றவங்க படிக்கணும்னு எதிர்பார்ப்பு சரியா ?......

 என்ன செய்யலாம். இருக்கவே இருக்கு... நம்ம கம்ப்யூட்டர்......

யோசித்தேன்.......

சின்னஞ்சிறு வயதில் விளையாடிய அந்த நாட்கள்  நெஞ்சினில் வந்து வந்து போனது.

மின் கம்பங்கள் இல்லாக் காலம். ஆறு மணிக்கெல்லாம் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற  சட்டம் எல்லா     இல்லங்களிலும்  இருந்த காலம்  .காரணம் இரவுப் போழுதில் தெருவில் கடந்து செல்வது
 இன்று போல் அன்று எளிதாய் இருந்ததில்லை என்பதுவே.

 வசதிஉள்ளவ்ர்களிடம் மட்டுமே டார்ச் லைட் இருக்கும். மூன்று பேட்டரிக் கட்டை போடும் பெரிய டார்ச்சுக்கு உறை போட்டு பாதுகாப்பாய் வைத்திருக்கும் பெரியவர் ஒருவர் எங்கள் கிராமத்தில் இருந்தார். அவரைத் தவிர யாரும் அதை தொடக்கூட முடியாது. அந்த உறை நூல் கயிறால் அவரால் பின்னப்பட்டது. அதை அதிசயாமாய் பார்த்த காலம்.

லாந்தர் லைட்டைக் கையில் வைத்து ச் செல்வோரும் உண்டு. வசதி படைத்தவர்கள் இரவு தெருவில் செல்லும்போது அவரது பின்னால் வெளிச்சம் தெரியும்படி லாந்தர் லைட்டை கொண்டு செல்பவர்கள் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள்.
மற்றபடி இரவு தெருக்களும் வீடுகளும் இருளாகவே இருக்கும்.

 ஒவ்வொரு ரூமிலும் சின்னச் சிம்மணி விளக்கு இருக்கும். அது பிள்ளைகள் படிப்பதற்கு. அந்த விளக்கு இருக்கும் அந்த குறுகிய இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். இரவில் கருமையான இருள் கூடி வெளிச்சம் குறைவாகவே இருக்கும்.

கடுக்கரை ஊர் தெருக்கள் எல்லாமே ஏற்றமும் இறக்கமும் கொணடது வாகவே  இருக்கும். இரத வீதி இல்லா கிராமம்.  வட்டவடிவமானதாகவும் இல்லை. சதுரமாகவோ நீள்சதுரமாகவோ இல்லாத ஊர். சும்மா பேருக்காக கீழத்தெரு ,மேலத்தெரு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, புதுகுளத்தெரு, கடைத்தெரு,பள்ளிக்கூடத்தெரு,ஆத்துப்பாறைத்தெரு,தரிசு என்று பெயர் பல உண்டு. கொல்லக்குடிப் பாறை,ஆனைக்கல் பாறை, மயிலாடும் பாறைகளும் உண்டு.... ஊரைச் சுற்றி வரும் ஒரே ஆறுக்கு பல பெயர்...... நல்லாறு, பீயாறு, கஞ்சியாறு,அலத்துறையாறு.......

நான் வசிக்கும் இடம் தரிசு. கடுக்கரையின் தலைநகரம்... என் சமவயது பள்ளித்தோழர்கள், உறவினர்கள் இருப்பதோ கீழத்தெருவில்... வாரவிடுமுறையில் கீழத்தெருவுக்கு விளையாடப்போவது வழக்கம். இருட்டுவதற்கு  முன்னால் விளையாட்டு முடிந்து வீட்டுக்குப் போக வேண்டும். போகவில்லையெனில் பிள்ளையைக் காணவில்லையே என பதறுவாள் அம்மா.


 சில சமயங்களில் நேரமாகிவிடும். தனியாய் வீட்டுக்குப் போக முடியாது.நாய்த்தொல்லை வேறு..... கீழத்தெருவில் அத்தை வீட்டிலிருக்க வேண்டிய சூழ்நிலை ஏறபடும். அங்கேயே சாப்பிட்டு தூங்கி காலையில் எழுந்து வீட்டுக்கு போவதும் உண்டு.

விளையாடப்போன பையன் வீட்டுக்கு வரவில்லையே என்று பயந்து அம்மா
வேலையாளிடம் சொல்லி பார்த்து வரச்சொல்வாள்.

 அவரும் வருவார்.

அவரிடம் நாளை வருவான் எனச் சொல்லி அனுப்பி விடுவர்கள்.

அந்த வீட்டில் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம். சில சமயங்களில் மரவையில் எல்லா கறிகளையும் போட்டு நன்றாய் விரவி வரிசையாய் உட்கார்ந்திருக்கும் எங்களுக்கு உருட்டித் தருவார்கள்.

எல்லோருக்கும் இருப்பதை பங்கிட்டு தரும் பாங்கு...

அப்படி சாப்பிடுவதற்கே அடிக்கடி போவதுண்டு.

இரவில் கீரை , நெல்லிக்காய்,தயிர் உணவு சாப்பிடக்கூடாது என்பதை அங்கிருந்துதான் அறிந்தேன். மீன் சாப்பிட்டால் மோர் எடுக்கக்கூடாது.........

 இருள் நீங்கும் பூரண நிலா வெளிச்சம் தரும் பௌர்ணமி நாட்களில் இரவு வெகு நேரம் “கல்லா ... மண்ணா விளையாட்டு விளையாடிய நினைவுகள்......

 மாசிமாதம் ஒரு  பௌணர்மி இரவில்...... எங்கள் மாமா எங்களை அழைத்து தெருவில் கிடக்கும் நெல்லை எடுத்துவந்தால் பரிசு தருவேன் என்றார்கள்.

நாங்கள் தெருவில் சுவர் ஒரங்களில், சின்னச் சின்ன பாறை இடுக்குகளில் இருந்தும் நெல்லைப் பொறுக்கிக்  கொடுத்தது நினைவில் வந்து போகிறது.அன்று மகம் நட்சத்திரம்.... அது நெல் பிறந்த நாளாம்.....

கள்ளன், சிப்பாய் விளையாட்டு, மட்டக்காளை ,ரப்பர் வண்டி, பாண்டி விளையாட்டு ........ இந்த நாள் அன்று போல் இல்லையே.......

 

No comments:

Post a Comment