Tuesday, December 24, 2013

தெய்வமே குடிகொள்ள விரும்பும் ஒரு அன்புஇல்லம்

ஒரு வியாழன் அதிகாலையில் எனது மொபைல் தனது பணியை தவறாமல் செய்து எனை உறக்கத்தில் இருந்து எழச்செய்தது.....

காலையில் மார்த்தாண்டம் பக்கம் உள்ள அதங்கோடு எனும் ஊருக்குப் போகவேண்டும்... எட்டரை மணிக்கு மேல்தான்....அதனால் காலை நடையினை ரத்து செய்திருந்தேன்...

அதனைத் தூங்கப் போகுமுன் மொபைலிடம் நான் சொல்லியிருக்கணும்... சொல்லல......

மொபைலின் வாயை மூடினேன்... இல்லையெனில் நான் எழுந்து அதனைத் தொடுவது வரை ரெண்டு நிமிடத்திற்கொரு முறை அலறும்.....

மறுபடியும் கண் மூடி தூங்க எத்தனித்தேன்......

மறுபடியும் என் காதருகே சத்தம்... ”எழந்திங்கோ.... ஆறுமணிக்கு ராமு வந்துருவான்.... வெள்ளமடத்துக்கு துட்டிக்குப் போகணும்.....” இது என் அவள்.

நான் வரல்ல.... நீப்......போ.....

”வாருங்கோ... மாத்தம்மாச்சிக்கு அக்காள்லா அது...... (அவள் இறந்து நாலு நாளாச்சு.....) போகல்லண்ணா அவ என்னமா நினச்சுருவா......வாங்க...... “

சொல்லிவிட்டுப் போய்விட்டாள்....

பாதிமனசோடு எழுந்தேன்.....

அந்த வீட்டுக்குப் போனோம்.....அது ஒரு பழைய வீடு... அதன் வாசல் அருகே மொட்டைத் தலையோடு நின்றிருந்தார் ஒருவர்... இறந்துபோன ஆச்சியின் நாலு மகன்களில் ஒருவர்

சிரிக்காமல் ..... ஆனால் வாஞ்சையோடு வா என்பதுபோல் தலையசைத்து அழைத்தார்.....

உள்ளே போக நினைத்து வாசல் பக்கம் போனேன். அந்த வீட்டு முற்றத்தில் உறவுக்கார பெண்கள் அனைவரும் மாரடித்துக்கொண்டு  அம்மாடி-தாயர  எனப் பல முறை முணு முணுத்தபடி சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

 அச்சமயம் உள்ளே ஆண்கள் போலாமா..... தெரியாது... நான் போகமல் தெருவில் உள்ள படிப்பரைல ....கருங்கல் பதித்த இடம்....அதில் இருந்தேன்.

வீடு புதுப்பிக்காமல் பழமை மாறாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சுத்துக்கட்டு வீடு. முற்றம் ...அதன் தெற்கிலும் மேற்கிலும் வாசல்கள்.... வடக்குப் பக்கம் ஜன்னல்.... ஓட்டுவீடு

அதன்பிறகு ஒருவர் எனை அழைக்க நான் உள்ளே போய் இருந்தேன்.....

எனக்குத் தெரிந்த ஒரு மொட்டை போட்ட இன்னொரு மகன் என் பக்கம் வந்தமர்ந்தார்...

அவர், “ அம்மை படுத்து ரொம்பநாளாயிற்று...வயசும் 90-க்கும் மேல.... கொஞ்சம் கஷ்டப்பட்டுற்றா.....மகளுக்கு நிச்சயதாம்பூலம்  இரண்டு நாட்களுக்கு முன்தான் நடந்தது. மே மாதம் கல்யாணம்...”.

என்னிடம் பேசியவரின் பெயர் சண்முகம்....

சண்முகத்தின் தந்தை  மறைந்து வருடங்கள் பல கடந்து விட்டன.....அவருக்கு நான்கு ஆண்...ஏழு பெண் பிள்ளைகள்..... தனதும் தன் மனைவியின் மறைவுக்குப் பின்,இருவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிவது வரை வீட்டை ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்ன அப்பாவின் வாக்கினை தெய்வ வாக்காகப் போற்றிப் பாதுகாப்பாய்  மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கின்றனர்.. இது அவரது  உறவினர் பாபு என்னிடம் சொன்னது......
அப்பாவையும் அம்மாவையும் மிகப் பாதுகாத்த பல விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்கு அந்த சண்முகம் மீதும் அவர் மனைவி மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது...

சண்முகம் தான் அந்த வீட்டில் இளையவர். அவர்தான் அந்த வீட்டின் முதுகெலும்பாய் இருந்தார்.

சண்முகத்துக்கு ஒரே ஒரு பிள்ளை...அது பெண்.... பீஇ படித்து வேலை பாக்குறா.....அவளுக்கும் கல்யாணம் நிச்சயாமாயிருக்கு.... ஆனால் அவளைவிட அதிகம் வயதான தனது அண்ணன் மகள் திருமணம் முடிந்தபின் தான் தம் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததையும் அறிந்தேன். அவர் மீதுள்ள மதிப்பு கூடிக் கொண்டே போயிற்று....


அவருடன் பிறந்த சகோதரிகளில் ஒருத்தி திருமணம் முடிந்த ஓரிரு வருடத்தில் அகால மரணம் அடைந்து விட்டாள் பல வருடங்களுக்கு முன்னால். அப்போது அவளது பெண் குழந்தைக்கு வயது இரண்டு மாதம்.
என்ன செய்வது....

 யாரும் முன்வராத நிலை....... அந்தக் குழந்தையை எடுத்து வந்தார்கள் சண்முகமும் அவர் மனைவியும்.....

தன் பிள்ளைபோல் வளர்த்து படிக்க வைத்தார்கள். B.E பட்டம் பெற்றாள்.வேலையும் கிடைத்தது...அந்தப் பெண்பிள்ளைக்குத் திருமண வயது வந்தது. மாப்பிள்ளை பார்த்தார்.
சொந்தத்தில் ஒரு பையனை அதுவும் இவர் செலவு செய்து படிக்க வைத்த பையனை மணமுடிக்க முடிவெடுத்து திருமண வேலை நடந்தது....

திருமண அழைப்பிதழ் அச்சடிக்க எழுதி அந்தப் பெண்ணிடம் காண்பித்தார்கள்.

அந்தப் பெண்ணின் தந்தைபெயர் இருந்த இடம் அவள் கண்டாள்.

அவள் சண்முகத்திடம்,“ மாமா..... என்னை வளர்த்தது நீங்க....நான் வளர்ந்தது இங்க.. அத்தை தானே மாமா எனக்கு அம்மா.....கல்யாண லெட்டரில் உங்கள் பெயரை இப்படிக்கு சண்முகம் எனப் போடணும். என் பெயர் வரும் இடத்தில் எனது மகள் என்று போடணும்...” என்றாள்.

கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் பனித்தன. இப்படியும் மனிதர்கள் உள்ளனரா....நன்றியை எவ்வளவு அழகாய் காண்பித்து விட்டாள்...மகளைப் போல வளர்த்த அந்தத் தாய் எப்படி அகம் மகிழ்ந்திருப்பாள்....

ஆசை மகள் ஆசைப்பட்டது போல் ..... எல்லாம் நடந்து முடிந்தது....

கணவனுக்கும் வேலை உண்டு..

இறையருளால் அவர்களுக்கு பெண் குழந்தை..... அவர்கள் இருவரும்வேலைக்குப் போகணும்..... பிள்ளையைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கணும்.... என்ன செய்ய....

இப்போதும் ஆதரவுக் கரங்கள், அவளை அணைத்து வளர்த்த அதே கரங்கள் உதவிக்கு வந்தன.

“நான் இருக்கேன்.... பிள்ளையை நான் பாத்துக்கேன்.... நீங்க இருவரும் வேலைக்குப் போங்கோ....”

இரண்டு மாதக் குழந்தையை தாயினும் மேலாய்ப் பேணி வளர்த்து வருகிறாள். அந்தப் பிள்ளையை தரையில் விட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்....

அவள் வளர்த்த இரண்டு பெண்பிள்ளகளும்...ஒன்று அண்ணிபெற்றபிள்ளை...மற்றொன்று தான் பெற்ற பிள்ளை....பொறியியல் பட்டதாரிகள்......

இதோ மூன்றாம் பெண் பிள்ளை..... இடுப்பில் இருந்து இறங்காமல் ஆச்சியிடம்
வளர்கிறது.
அந்தப் பால்குடி மாறா சிசுவை வைத்திருக்கும்  ஆச்சிக்கு அது சுமையாய் இல்லை.  சுகமாய் இருக்கு.

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமம்மா....

எனக்கு, என் உணர்வுகளும் என் புலன்களும் நெகிழ்ந்து போய்க் கொண்டே இருப்பது போன்ற உணர்வு....நானென்ற அகந்தை என்னிடம் இருந்து வேகமாய்ப் போவது போன்ற உணர்வு....

நான் அதிசயமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தேன்....

ஒரு பெண்.... சண்முகத்தின் மனைவி.... குழந்தைக்கு மட்டுமா தாயாய் இருந்தாள்.

அவள் கணவரைப் பெற்ற தாய்....அந்தத் தாய்க்கு எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும் அவளை அன்போடு அரவணைத்த கரங்கள் இவளுடையதே.

தள்ளாத வயதில் வயோதிகம் காரணமாய்  சுருங்கிக் கிடந்த    மாமியாரை அன்னைபோல் அருகே அமர்ந்து, அமுதூட்டி அகமும் முகமும் மலர அரவணைத்தாளே....... அது மாமியார் பெற்ற பாக்கியம்.

தன் அருகே படுக்க மருமகளை அழைப்பாளாம் அவளை அன்னையாய் நினத்து.

மாமியார் உயிர்  இருக்கும்வரை மறவாமல் உச்சரித்த பெயர் ,ஒரே ஒரு பெயர் தான்.....   அது சண்முகத்தின் மனைவியின் பெயரே.

நல்ல மகள்..... நல்ல மனைவி..... நல்ல தாய்....  எல்லாமே  --- தான்...

முதலில் வீட்டைப் பார்த்த போது இருந்த என் நினைப்பு , இப்போ மாறி விட்டது. வீடு பழசானது... சின்னதாய் இருந்தது. அங்கு வாழும் மனிதர்களின் மனம் விசாலமானது. இதயம் சிறிதெனினும் எத்தனைபேர் இருந்தாலும் அத்தனை பேர்களையும் அந்த இதயம் தாங்குகிறதே.....

அது... ஒரு இல்லம்... அன்பு இல்லம்... தெய்வமே குடி கொள்ள விரும்பும் இல்லம்.... அன்னை இல்லம் அது.

[ உண்மைப் பெயரை குறிப்பிடவில்லை.... அடுத்தவீட்டு ஜன்னல் வழியாய்ப் பார்த்ததை வெளியே சொல்லாதே என்று யாரோ ஒருவர் சொன்னது  இன்று என் நினைப்புக்கு வந்து தொலைத்தது......  கேட்டவை அனைத்தும் பதிவு செய்யப்படவில்லை. நான் செய்தது சரியோ? தவறோ? நானறியேன்]


2 comments:

  1. ராமன் வீட்டின் ஜன்னல்கள் திறந்திருந்ததால் தான் ராமாயணம் பிறந்தது.
    எதை எடுத்தாலும் எனெக்கென்ன இலாபம் என்று ஆய்வு செய்து
    உதவும் கலி காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வற்றி போன நம்
    கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீரை நிரப்புகிறது.
    பிரதிபலன் பாரா தூய அன்பின் முன் தலை வணங்குவதை தவிர
    வேறென்ன செய்திட முடியும்

    ReplyDelete
  2. நான் எழுதிய இந்தப் பதிவு பலராலும் படிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. என்னினும் என் மனதில் ஓரு குறை.ஒரு உண்மையை தெளிவாய்ச் சொல்லாமல் நல்லவர்களின் பெயரை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ?.......

    நான் ஜனுவரி மாதம் கடுக்கரைக்கு சென்றிருந்த போது , சண்முகத்தின் மனைவியின் தாய் மாமாவைச் சந்தித்தேன். அந்த வேளையில் நான் அந்தப் பெண் பற்றி கேட்டேன்.... அவர் சொன்ன வார்த்தை... “ அவள் ஒரு அதிசயப்பிறவி.... இவள் போல் எங்கும் பார்த்ததும் இல்லை.... கேள்விப்பட்டதும் இல்லை......” நான் பிரமித்துப் போனேன்.....
    கடுக்கரை வடக்கு வீட்டுக் குடும்பத்தில் பிறந்த அவள் குடும்பத்தில் தான் நானும் பிறந்தேன் என்பதில் ஒரு அளவிட முடியாத மகிழ்ச்சி.... அவள் பெயர் ஆறுமுகம். அவள் கணவர் உண்மைப் பெயர் ஆறுமுகம்பிள்ளை... ஆறுமுகம் வளர்த்த இன்னொரு பையன் அவளது சகோதரர் மகன்..... கேட்டுக் கேட்டு அதிசயித்துப் போனேன்....

    ReplyDelete