Sunday, May 13, 2012

நான் அறி்ந்த கிராமத்து மாணவன்



கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை படித்த பள்ளிக்கூடம் இன்று இல்லை. காரணம் கிராமத்தில் வாழும் குப்பனும் சுப்பனும் கூட தன் பிள்ளைகளை கிராமத்துப் பள்ளியில் சேர்க்காமல் வெகு தூரம் இருக்கும் ஆங்கில வகுப்பு நடத்தும் பள்ளிகளில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் 1960 களில் கிராமத்துப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த பல பெரியவர்கள் நமது நாஞ்சில் நாட்டிலும் உண்டு.
பள்ளிக்கூடத்தில் 11 வருஷம் பயின்று தேறியபின் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர வரும் மாணவர்களுக்கு ஒரு வாரம்  BRIDGE COURSE  நடத்துவார்கள். பள்ளியில் தமிழில் படித்து வரும் மாணவர்களுக்காக ஆங்கில வகுப்புகள் நடைபெறும். அதன் பிறகு தான் அவர்களுக்கு புகுமுக வகுப்புகள் ஆரம்பமாகும்.
நாஞ்சில் நாட்டின் முகமே கிராமம் தான். அங்கே தெரிசனங்கோப்பு ஒரு சிறிய கிராமம். வயல்களும் தென்னைமரங்களும் அதிகம் அங்கே உண்டு. ஊரில் வடக்காறு, தெக்காறு என்று ஒரே ஆறினை இரண்டு பெயர் சொல்லிக் குறிப்பிடுவார்கள். நான்கு ரதவீதி உண்டு. கீழ ரத வீதியில் ராகேஸ்வரர்-உலகநாயகிஅம்மன் கோவில் இருக்கிறது. அது மிகப்பெரிய கோவில்.தெக்காற்றின் கரையோரம் சாஸ்தாங்கோவில்,அதன் பக்கம் ஸ்ரீதரநங்கை அம்மன் கோவில்.
  மூன்று அம்புகள் மூலம் தாடகையை வதம் செய்த ராமர் தான் செய்த பாவம் தீர சிவனை வணங்கியதால் அந்த சிவனுக்கு ராகவேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக ஒரு கதை உண்டு.
திரி என்றால்மூன்று.சரம் என்றால் அம்பு. திரிசரம் கோப்பு தான் நாளடைவில் மருவி தெரிசனம்கோப்பு என்று ஆனது எனச் சொல்வோரும் உண்டு.
கிழக்குப் பக்கமுள்ள மலை தாடகை வீழ்ந்து கிடப்பது போலவே பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
அழகான இந்தக் கிராமத்தில் ஓய்வு பெற்ற Sanitary Inspector வாழ்ந்து வந்தார். இயல்பாகவே ஆங்கிலப் புலமை கொண்ட அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு TUTION எடுத்து வந்தார்.
அவரிடம் ஒரு மாணவன் படித்தான். நன்றாகப் படிக்கக் கூடிய அவனுக்கு தனியாக Tution  தேவை இல்லை. ஆனாலும் ஆங்கிலம் படிப்பதற்கு வேண்டியே அவரிடம் படித்தான்.
அவன் படித்த பள்ளிக்கூடம் மிக மிகச் சிறிய கிராமமான குறத்தியறையில் தான் இருந்தது, இன்றும் இருக்கிறது.
நன்றாகப் படித்துக் கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் விதி விளையாடியது. அவனது தந்தையார் திடீரென நோய்வாய்ப்பட்டு இப்பூவுலகை விட்டு மறைந்து விட்டார். தந்தையோடு கல்வி போகுமென்பார்கள். தாயோடு அன்பு போகும் என்பார்கள். அன்பும் போனது……ஆம் அவனது அம்மாவும் அவனையுமவன் கூடப் பிறந்த மூன்று சகோதரர்களையும் அனாதரவாக விட்டு விட்டு மறைந்தாள்.

ஆச்சி தாத்தா வீட்டில் கடுக்கரையில் வளர்கிறான். வசிக்கும் இடம் மாறினாலும் வாசிக்கும் இடம் அதாவது பள்ளிக்கூடம் மாறவில்லை.
1968-ல் S.S.L.C இல் பள்ளியில் முதல் மாணவனாகத் தேறுகிறான்.


அவன் புகு முக வகுப்பு தூய சவேரியார் கல்லூரியில் படிப்பதற்காகச் சேர்ந்தான். நகரத்து மாணவர்கள் எல்லோருமே  ENGLISH MEDIUM  படித்து வந்தவர்கள் தான்.  அவர்களின் எண்ணிக்கை தான் கூடுதல்.ஒரு வாரம் ஆங்கில வகுப்பு  bridge course நடத்தினார்கள்.
மாணவர்களின் திறமை பற்றி அறிந்திட Test  நடந்தது. அடுத்தநாள்  Leabue Auditorium –த்தில் புகுமுக வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர்  Rev.Fr. ராஜநாயகம் நடந்து முடிந்த டெஸ்ட் பேப்பர்களை கையில் வைத்துக் கொண்டு பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார்.
எங்கோ ஒரு மூலையில் எந்தவிதமான சிரத்தையும் இல்லாமல் இருந்த நம் நாஞ்சில் நாட்டு மாணவன் பெயரை முதல்வர் வாசிக்க ,எழுந்து நின்றான் . சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.
கல்லூரி முதல்வர் கேட்கிறார், நீ எந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்திருக்கிறாய் ? என ஆங்கிலத்தில் கேட்க அந்த மாணவன் தமிழில் பதில் சொன்னான்.
“அரசினர் உயர்நிலைப் பள்ளி.,குறத்தியறை” என்று உரக்க நின்ற இடத்தில் இருந்தே சொன்னான்.
தமிழ் மீடியத்தில் படித்த மாணவன் தான் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறான் என்று முதல்வர் மிகவும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறார்.

அந்த மாணவன் 1996-ல் அதே கல்லூரிக்கு தன் மனைவியோடு போனார். அந்தக் கல்லூரியின் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவரது மனைவி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்தார்.

பிறந்த ஊருக்கும் வளர்ந்த ஊருக்கும் பெருமை சேர்த்த அந்த மாணவன் திரு.A.குளத்துரான் பிள்ளை. 
தன் தம்பிகளுக்கு அன்புத் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் அவர் இன்று நாஞ்சில் நாட்டின் முக்கிய பிரமுகர்.  அவர் ஒரு பிரபலமான  Chartered Accountant.

No comments:

Post a Comment