Thursday, October 3, 2013

நாட்கருதுப் பானையை நிறைக்கும் ஒரு கிராமிய இனிய வீட்டு விழா

அக்டோபர் மாதம் முதல் நாள். காலையில் வந்த முதல் தொலைபேசி அழைப்பு சுரதவனம்  சுவாமிகளிடம் இருந்து வந்ததால் மிகவும் அன்பாகப் பேசிய குரல் கேட்டு மகிழ்ந்தேன்.  மகாராஷ்டிரா ஆன்மீகச் சுற்றுலா இருவாரங்கள் சென்று வந்த அவர், என்னைப் பார்க்க வருவதாக சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது. அன்று எங்க வீட்டில் “ நிறை”.

அவர்கள் சென்ற இடங்களை வலைத்தளத்தில் பார்த்து ஆங்கிலத்தில் உள்ளனவற்றை தமிழில் மொழிபெயர்த்து சுருக்கமாகவும் தமிழில் தெளிவாகவும் அச்சுப்பிரதியெடுத்து கொடுத்திருந்தேன். அதை பல பிரதிகள் எடுத்து அவர் அனைவருக்கும் கொடுத்தார். ராமருக்கு அணில் செய்த உதவி போல் என் செயலையும் உயர்வாய் எண்ணி நன்றி பாராட்ட வந்ததாக அவர் வருகையை நான் என் மனதில் கொண்டேன்.

 காலையில் கடுக்கரையில் இருந்து ஐயப்பன் கதிர் (நெற் கதிர் ) கொண்டு வந்தான்.  நாங்கள் தனி அறையில் (அரங்கு  or Store room) தீபஒளி விளக்கின் முன்னால் வைக்கப்பட்டிருந்த இலையில், கொண்டுவந்த நெற்கதிர்களை ஐயப்பன் வைத்தான். பக்கத்தில்  ஓலைவட்டி இல்லாததால்  ஒரு பேசினில் பழைய நெல்லும் இருந்தது. வெற்றிலை, பாக்கு, பழம் , கதிர் முன்னால் இருந்தது.

சாம்பிராணி புகைத்து , தேங்காய் உடைத்து , சூடத்தட்டில் நெய்யூற்றி திரிவைத்து தீபமேற்றி தீபாராதனைக் காட்டினேன்..... நாள்கதிர்பானையில் முதலில் பழைய நெல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் போட்டதற்குப் பிறகு நெற்கதிர்களை எடுத்து அதனை சுருட்டி பானையினுள் வைத்தேன். மூன்று தடவை இது போல் செய்தேன். என் மனைவியும் பானையில் கதிர் வைத்து நிறைத்தாள்.

” நிறைநாள்” அன்று காலையில் சர்க்கரை போட்ட அவல் தான் காலை உணவாக எடுத்துக் கொண்டோம்.
 11 மணியளவில்  முருகதாஸ் சுவாமி வீட்டுக்கு வந்தார்.அவர் அஷ்டவிநாயகர் உருவப் படம் கொண்ட லிகித ஓலை ,சீரடி சாய்பாபா படம் தந்தார்.

 சற்றும் எதிர் பாராமல் அவருடன் நான் பெரிதும் மதிக்கும் நண்பர் ஒருவரும் வந்தார்.
  அவர்களை பானையில் கதிர் வைத்து நிறைக்கும்படி வேண்டினோம்.

அதன்பின் பலவிசயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.... ‘நிறை” பற்றி பேச்சு வந்தது.

ஏன் பழைய நெல்லை முதலில் அந்தப் பானையில் போடச்சொன்னீர்கள் என்று வந்தவர்களில் ஒருவர் கேட்டார்.
விவாசாயிக்கு நெல் தான் கடவுள். பழையன போகும்போதும் அதனை மறக்காமல் நன்றியாய் இருப்பதை காண்பிக்கவே அச்செயல் என்றேன்.

நாள்கதிர் பானையை வித்தியாசமாக ஓவியம் தீட்டி வைத்திருக்கிறீர்களே ...ஏன் என்று கேட்டார். வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே அதனைப் பயன்படுத்துவது வழக்கம். வேறு எதற்கும் அதனை பயன்படுத்த எடுக்க மாட்டார்கள்... அது நிறை பானை என்று தனியாய்த் தெரியவே கடவுள் படம் ஓவியமாய் வரைந்து வைத்திருக்கிறோம்.
அவர் மேலும் பல கேள்விகள் கேட்டார். நான் சொன்னவை ....................

 55 வருடங்களுக்கு முன்னால் நேரிடையாய் நான் கலந்து ,பார்த்தவைகளை அவரிடம் சொன்னேன்.
வயல் அறுவடைக்குத் தயாராகும் நாள் நெருங்கும் போது, நல்ல நாள் பாத்து நல்ல விளைந்த வயலின் ஒரு மூலையில் (  வடகிழக்கு மூலை என்று ஞாபகம்)  கதிர் அருவாளை வைத்து என் அப்பா, வானத்தில் கதிரவனை வணங்கிக் கதிர் அறுப்பார். அதன் பின் வேலையாட்களும் நண்பர்களும் கதிர் அறுத்து வைப்பார்கள்.... அப்பா போதும் என்று சொல்லும் வரை அறுத்து சிறு சிறு கட்டாக கட்டி வைப்பார்கள்.

அதன்பிறகு மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை அதன் மீது வைத்து, கொன்னைப்பூ வைத்து பூஜை செய்வார் அப்பா. பூஜை முடிந்த பின் வயது மூப்படிப்படையில் ஒவ்வொருவருக்கும் கதிர் கொடுப்பார்கள்.

 அப்பாவின் அப்பா (தாத்தா) உயிரோடு இருந்தவரை எனது சின்னப்பாமார்கள் அவரது பிள்ளைகளும் எங்களுடன் கதிர் அறுக்க வயலுக்கு வருவார்கள்.

எல்லோரும்  எங்க அப்பாவிடம் இருந்து  கதிர் பெற்றுக் கொண்டு, அவர் பின்னால் வயல் வரப்பில் வரிசையாய் செல்வது கண்டு சந்தோசமாய் இருக்கும்.
தெருவழியாய் வரும்போது, வீட்டின் வாசலில் காத்திருந்து நிற்பவர்களைக்  கண்டு அவர்களுக்கும் கதிர் கொடுப்பார் அப்பா. அப்படி வாங்குவோர்களில் அப்பாவின் அம்மையும் (ஆச்சி) உண்டு. சொந்த மில்லாதாரும் உண்டு....  பின்னாட்களில் இந்த வழக்கம் இல்லாமல் போனது.

வீட்டு வாசலை அடையும்போது எனது அம்மா அங்கு நின்று கதிர் கட்டு ஒன்றை அப்பாவிடம் இருந்து வாங்குவாள்.

பூஜை முடிந்து நாட்கருதுபானையை நிறைப்பார்கள்.
பின் வயிறும் நிறையும் காலை உணவான சர்க்கரைபோட்ட அவல் சாப்பிடுவதால்.......

நாங்கள் கிராமத்தை விட்டு வந்தாலும் வீட்டில் நிறைப்பதை வழக்கமாய் கடவுள் அருளால் கடைபிடித்து வருகிறோம்....

இன்றைய நாளில் அதாவது இது போன்ற நாளில் எனது அப்பா, அம்மா என்னோடு இருப்பது போன்ற உணர்வு என் நெஞ்சில் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.

           புதுநெல் அரிசி சாப்பிடும் நிகழ்வு ஒன்று உண்டு. புத்தரிசி சாப்பாடு அது. அன்று  எல்லோரும்  சேர்ந்துதான் சாப்பிடுவோம்.                       அறுவடைக்காலங்களில் நடக்கும்   திருமணத்திற்குப் போனால் பந்தியில் சாப்பிடவேண்டும். அநேகமாய் அந்த சாதம் புது அரிசியில் தான் சமைத்திருப்பார்கள். வீட்டில் புத்தரிசி சாப்பாடு சாப்பிடாமல் எனது அப்பா வெளியே எங்கும் சாப்பிட மாட்டார்கள்...... திருமணத்திற்கு கண்டிப்பாய் போக வேண்டும் எனில் புத்தரிசி சாப்பாடு வீட்டில் வைத்துவிடுவார்கள்....  அரிசி தயாராகவில்லை என்றால் நாட்கருதுப் பானையில் உள்ள கதிர் நெல்லினை எடுத்து உமியை உரித்து ஒரு கைப்பிடி அளவெடுத்து பழைய அரிசியுடன் கலந்து சமைத்து புத்தரிசி சாப்பிடுவதுண்டு.

சீடை செய்வது ( கடையடைக்காய்) அந்த நாளில் தான் செய்து தருவார்கள்....



1 comment:

  1. இனிய நினைவுகள்...

    பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கிராமத்தில் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டு களிக்க ஆசை....

    ReplyDelete