Tuesday, December 6, 2011

ஜீவா என்ற சொரிமுத்து கடுக்கரையில் ஒருநாள்

1940 களில் பிரட்டீஸ் அரசினரால் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலவர்கள் தலைமறைவாய் இருந்துகொண்டு கட்சியின் தொண்டர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்த தலைவர் ஜீவா தலைமறைவாக இருந்த இடம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்ட கடுக்கரை.அவர் அதிகமாக கடுக்கரை ம.வேலப்பன் வீட்டில் தான் தங்கி இருந்தார்.

 எனது மைத்துனன் ராஜேந்திரன் அவரது ஆச்சி அதாவது அப்பாவின் அம்மா சொன்னதாக ஒரு சுவாரஸ்யமான தகவலைக் கூறினார்.ராஜேந்திரனின் அப்பா ஜீவாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இரவு உணவு சாப்பிட தரையில் ஜீவா உட்பட எல்லோரும் அமருகிறார்கள். மின்சார வசதி இல்லாத காலம்.சாப்பிடும் இடத்தில் ஒரு அரைக்கேன் லைட். அது தரும் வெளிச்சத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அபபொழுது உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஆச்சியை ஜீவா உற்றுப் பாத்துக் கொண்டே இருந்தார். ஆச்சிக்கோ தன்னை ஏன் பாத்துக் கொண்டே இருக்கிறார்....பெரிய தலைவர்லாஇவரு....என நினைத்துக் கொண்டே நடந்து செல்லும் போது ஜீவா கேட்கிறார் ,“ அம்மா.... உங்களுக்கு சொந்த ஊர் கடுக்கரையா?”

’இது  என் வீட்டுக்காரரின் வீடு. நான் பொறந்து வளந்ததெல்லாம் பூதப்பாண்டி’

“ அதானே பாத்தேன்.... என்னத் தெரியல்லியா.. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் படிச்சோம்லா... நான் பட்டம் பிள்ளையின் மகன் சொரிமுத்துல்லா....” ஜீவா சொன்னார்.

 “ இப்பம்தான் மொகத்த சரியா பாக்கேன்.....ஆமாம்.... நீ மூக்கன்லா.. அப்பம் நீ மூக்கு குத்திருந்தேல்லா.....ஒம்பேரு ஜீவாண்ணுல்லா எல்லாரும் சொல்றாங்க....பெரிய தலைவர்ணும் சொல்றாங்க..”

’இவங்கள்ளாம் அப்படி சொல்றாங்க...நான் அதே மூக்கந்தான்.....’

ஆச்சிக்குப் பெருமை.....ஒரே மகிழ்ச்சி....

ஆச்சி சொன்ன இந்த தகவல் பேரனுக்கும் தனது ஆச்சி ஒரு பெரிய தலைவருடன் பள்ளிக்கூடத்தில் படித்தவள் என்பதில் பெரும் மகிழ்ச்சி....

No comments:

Post a Comment