Tuesday, December 20, 2011

விருந்தில் தொலைந்த மோதிரம்

நான் இன்று காலையில் இந்துக்கல்லூரிக்குச் சென்றேன்.கல்லூரியில் என்னுடன் வேலை பாத்த இப்பொழுதும் வேலை பார்க்கிற ஆசிரியர் வில்சனைக் கண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம்.

அவரைப் பார்த்து திரும்பி வீட்டுக்கு வரும்போது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

நான் கல்லூரியில் கணிதத்துறை தலைவராக பொறுப்பேற்றபின், ஈஸ்வரப்பிரசாத் கணிதத்துறையில் முதல் Ph.D பட்டம் பெற்றதற்காக விருந்து தர விரும்பினார்.
என்னிடம் வந்து சார் ஹோட்டலில் போய் நாம் சாப்பிடுவதைவிட ஒரு குக்கை ஏற்பாடுபண்ணி சமையல் செய்து விருந்து வைக்கலாமே என என்னிடம் கூறினார்.

நானும் 'அதுதான் மிக நல்லா இருக்கும்' என்று சொன்னேன்.

எங்கே வைப்பது என கேட்க அவர் என்வீட்டில் அனைவரையும் அழைக்கலாம் அது எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்று பிரசாத்தே சொன்னார். நான் முழு மனதுடன் சம்மதித்தேன்.

இடம் என்னுடைய வீடு எனத் தீர்மானமானது. எல்லாம் முறைப்படி நினைத்தபடி ஒரு குறிப்பிட்ட தேதியில் விருந்து நடந்தது.

இரவு கணிதத்துறை ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்தனர். என் வீட்டு மாடியில் தான் எல்லோரும் கூடி இருந்து விருந்து அருந்தினோம். விருந்து முடிந்த பின் எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர்.

எங்களுடன் வந்தவர்களில் கடைசியாக சாப்பிட்ட மகேஷ்வரன் கீழே வந்து என்னிடம் ஒரு தங்க மோதிரத்தைக் காண்பித்து ‘இது மாடியில் கிடந்தது. உங்கள் மோதிரமா ?’ எனக் கேட்டார்.

நான்,“இது என்னுடையது இல்லை. யாருக்கென்றும் தெரியவில்லை.நாளைக் காலையில் பாத்துக்கலாம்” என்று சொல்லி அவரிடம் அவர் மோதிரத்தைக் கண்டு எடுத்து என்னிடம் தந்ததற்கு நன்றி சொன்னேன்.

அவர் போனபின் நான் அந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்ததில் ஒரு பெண் அணியும் மோதிரம் எனப் புரிந்து கொண்டேன். பின் சற்றுத் தீவிரமாக நானும் என் மனைவியும் மோதிர அமைப்பை பார்த்ததில் அது அணிபவர்கள் யாராக இருக்கும் என ஓரளவு கணித்தோம். அதன் படி வில்சன் சாரிடம் போன் பண்ணி விசயத்தைக் கூறினேன்.

வில்சன்,“ சார்.... என் மனைவியின் மோதிரம் தான் அது. வீட்டுக்கு வந்த உடனே அவள் மோதிரம் தொலைந்து போன விசயத்தினை என்னிடம் கூறினாள்....சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் போன் வந்தது” என்றார்.

அடுத்தநாள் மோதிரத்தினை அவரிடம் கொடுத்தேன்.

அதன்பிறகு நாங்கள் சிவலோகத்திற்கு ஒரு நாள் காலையில் போய் மாலையில் வந்தோம். அங்கு எல்லோரும் வெகு நேரம் குளித்து விட்டு வெளியே வரும்போது எங்களில் ஒருவர் தன்னுடைய கை விரலில் மோதிரம் இல்லாதிருப்பதைக்கண்டார்.

அவர் வில்சன் சார்.

No comments:

Post a Comment