Monday, December 12, 2011

வடக்குத்தெரு ராமன்பிள்ளையும் புதுக் கண்ணாடியும்





கடுக்கரை ஊரில் வடக்குத்தெருவின் முடிவில் ஒரு குளம்.அது தென் வடலாக நீண்ட குளம்.கிழக்குப்பக்கக் கரை காட்டுப்புதுர்ர் செல்லும் சாலை அந்தச்சாலை வழியே செல்லும் போது ஒரு பெரிய ஆலமரம். அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் திட்டு திட்டாக இருக்கும் பாறை.எப்பொழுதும் அந்த இடம் நிழல்தரும் குழுமையாக இருக்கும்.வயலுக்குப் போவோர் வருவோர் அந்த இடத்தில் இளைப்பாறுவது வழக்கம். அதன் பக்கத்தில் உள்ள வயல்களில் அறுவடை செய்வோர் அந்தப் பாறையில் வைத்து சூடடிப்பது வழக்கம்.

நிழல் தரும் அந்தப் பாறையில் ஒருவர் சிந்தனை செய்யும் பாவனையில் வடக்கு மலையை பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

கண்ணாடி போட்டிருந்த அவர் மிகக் கூர்மையாக எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த வழியே சென்ற பெண்கள்.“ சமையர்கார அண்ணெ, என்னத்த உத்துப் பாத்துக்கிட்டிருக்கீரு...அப்படி அங்க என்னதான் இருக்கு.” கேட்டார்கள்.

‘ஒண்ணுமில்ல. நேத்தைக்குத்தான் புதுசா கண்ணாடி போட்டேன். அது எப்படி இருக்குன்னு பாத்துக்கிட்டிருக்கேன்.’

மலைக்கு அப்புறம் உள்ள இடமும் தெரியுதாக்கும் என நக்கலாக கேட்கிறாள் ஒரு பெண்.

அவர் , “ ச்சேச்சே....அது தெரியாதுல்லா. அந்தப் பாறையில ஒரு சின்ன எறும்பு ஊர்ந்து போவது மாத்திரம் மிகத் தெளிவாய் தெரிகிறது....” சிரிக்காமலே சொன்னார்.

ஆமாம் உமக்கு இண்ணைக்கு வேற ஆள் கிடைக்கல்லியா.. நாங்கதான் கிடைச்சமாக்கும் எனச் சிரித்தபடியே ரசித்துக்கொண்டு போனார்கள் பெண்கள்.

இந்த விசயத்தை என்னிடம் சொன்னது ராஜேந்திரன்.அப்போ அந்த சமயல்கார ராமன்பிள்ளையும் எங்க கூட இருந்தார்.

ராமன் பிள்ளை ,“ மருமகனே, நம்ம மோரு கதையைச் சொல்லுங்கோ தங்கப்பன் கேக்கட்டும்” என்றார் ரஜேந்திரனைப் பாத்து.

வாய்விட்டுச் சிரித்தார்கள் ராஜெந்திரனும் ராமன்பிள்ளையும். நான் ஆவலாக கேட்க ஆயத்தமானபோது என்னுடைய போன் சிணுங்கியது.

அழைத்தது ராமு . நான்,“ இன்னொரு நாளைக்கு வாறேன். இப்பம் எனக்கு அவசரமாக ஒரு இடத்துக்கு போகணும். மோர்க்கதையை அப்பம் மறக்காமச் சொல்லு...”




No comments:

Post a Comment