Sunday, December 18, 2011

அடுத்தவர் வீட்டு மனையில் பூமி பூஜை

சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகரில் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தோம். அது புதிதாக உருவான பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீட்டு மனைகள் உள்ள இடம். கிருஷ்ணன் கோவிலின் தெற்காக அமைந்த மனை,சுசீந்திரம் ஊரின் மேற்குப் பக்கம் உள்ள மனைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக புதியதாக வீடுகள் கட்டப்பட்டு பல மனைகள் வீடு அமைவதற்காக காத்திருக்கின்றன.

நான் போய் இருந்த வீட்டின் பக்கத்தில் இரண்டு மனைகளில் வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. 16 பில்லர்கள் போடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

என் அருகே இருந்தவரிடம் ,“ அங்கே கட்டும் வீடு பெரிதாக இருக்கிறதே. அது யாருக்கு... நமக்கு தெரிஞ்ச ஆளா?”

“அது ஒரு ஆளுடைய மனை இல்லை. ரெண்டு பேருடையது” என்றார்.

“ஓஹோ.... ரெண்டு பேரும் ஒண்ணு போலவே வீடு கெட்டுகிறார்களே....அண்ணன் தம்பிகளா....” நான் கேட்டேன்.

“அப்படி எல்லாம் இல்ல... ஒரு தமாஷ் நடந்து போச்சு” என்றார்

“என்னது.... தமாஷ் நடந்து போச்சா.. என்ன தமாஷ் நடந்துச்சு...” கேட்டேன்

“ரெண்டுமனைகளில் வடக்கு மனைக்கு சொந்தக்காரர் வீடு கட்ட வேண்டும் என நினைத்து அய்யரை எல்லாம் அழைத்து வந்து பெரிய பூஜையெல்லாம் போட்டு சொந்தக்காரர் புடை சூள வந்து கல் எல்லாம் போட்டு வேலையையும்ம் நல்ல நாள் பாத்து ஆரம்பித்து விட்டார்.வேலையும் நடந்து எட்டு குழிகள் தோண்டப்பட்டன. மழை வந்து விட்டதால் பணி நிறுத்தப்பட்டது. மழை வராமல் இருந்தால் எட்டு தூண்கள் எழும்பி இருக்கும்....நல்ல காலம் மழை வந்து அவரைக் காப்பாத்திற்று...”

“ என்ன சொல்றீங்க. மழை வந்து கெடுத்துற்றுனு சொல்லுங்கோ” என்றேன்.

“அவர் கல் போட்டதும் பூஜை செய்ததும் அவரது மனையில இல்ல. அடுத்த தெக்கு மனையில். அது அவரது மனையே இல்லை”

நான் மிகுந்த வியப்புடன் அந்த ரெண்டு மனைகளின் அருகே சென்றேன். என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். “ இப்படி வேலை நடந்திருப்பது தெற்கு மனையின் சொந்தக்காரருக்குத் தெரியுமா...?. விசயம் தெரிந்தால் சண்டை வருமே.”

‘அவர் தோண்டிய குழியை மண் போட்டு நிரப்பிக் கொடுத்துருவாரு’

அப்பொழுது ஒரு வயதான பெரியவருடன் ஒரு தம்பதியினர் மனை அருகே வந்து கொண்டிருந்தனர். சுத்தி சுத்தி பார்த்தார்கள் . அது அவர்களுடைய மனைதானா .அவர்களால் பாத்து உறுதியாக அந்த மனை தங்களுக்கு உரிமையானது என்று சொல்ல முடியவில்லை. நாளை லேய் அவுட்டைக் கொண்டு வந்து பாக்கணும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களுடன் வந்த பெரியவர் என் கையைப் பிடித்து “ பொன்னப்பா இங்க நிக்க என்ன விசயம்” என்று கேட்டதும் தான் நான் அவரைப் பார்த்தேன்.

அவர் எனது ஆரம்பப் பள்ளிக்கூட ஞானத்து வாத்தியார். வேட்டியை மடித்துக் கட்டியிருந்த நான் மடிப்பை எடுத்து சரியாக்கி மிகவும் பௌயமாய் நின்று ,“ என் பேரைக் கூட இந்த வயதிலும் ஞாபகம் வச்சிருக்கீங்களே சார்...” என் கண்ணில் நீர் தழும்பியது.

“எப்படி பொன்னப்பா உன்ன மறக்க முடியும். நீ யாரு.கடுக்கரை ஆறும்பிள்ள அண்ணாச்சியின் மகன் லா.கடுக்கரையில் வேலை பாக்கும்போது தினமும் உங்க வீட்ல தான் நாங்க சைக்கிள வைப்போம்” என்றார்.

அந்த தெக்கு மனையின் சொந்தக்காரர் எனது ஆசிரியர் ஞானத்து சுப்பிரமணியபிள்ளை சாரின் மகன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.

No comments:

Post a Comment