Saturday, October 29, 2011

புட்டும் .....முட்டையும்-------- 1

காலையில் நான் என் மருமகளிடம் , “இண்ணைக்கு என்ன டிஃபன்” கேட்டேன்.புட்டு என்றாள்.
புட்டு மாவு குவைத்தில் கிடைக்கும்....தேங்காயும் கிடைக்கும். விலைதான் கொஞ்சம் கூடுதலா இருக்கும்.

புட்டு ரெடியானதும் தட்டத்தில் வைத்து தந்தாள்.சம்பா அரிசிப் புட்டு புட்டுக்குழலில் வைத்து நீராவியால் வெந்தப்புட்டு.வெள்ளையாய் தேங்காய் தூவலுடன் மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று தெரிகிறதே அது என்ன என கேட்டேன். அது ஏத்தம்பழம் என்றாள்.

நான் இதுவரை இப்படி செய்து பாத்ததே இல்லையே....உனக்கு இந்த idea எப்படி வந்தது...?

கடுக்கரை பெரியம்மாதான் ஊர்ல எங்கூட இருக்கும்போது செய்தா....சாதாரணமா புட்டுடன் பழத்தைச் சேர்த்து விரகி சேர்த்து தின்பதுதான் வழக்கம்....நான் முதன் முதலாக இப்பதான் பழத்தையும் புட்டுடன் சேர்த்து அவித்து சாப்பிடுகிறேன்...நன்றாக இருந்தது.

சக்கா பழத்தையும் சிறு சிறு துண்டாக்கி புட்டு மாவுடன் சேர்த்து அவித்தாலும் நன்றாக இருக்கும் என்றாள்.

முட்டை ஆம்ப்ளேட் புடிக்குமா ? சாப்பிடலாமா ?மருமகள் என்னிடம் கேட்டாள். Cholestrol இருப்பதால் சாப்பிடக்கூடாது...ஆனால் எனக்கு அதுதான் ரொம்ப புடிக்கும் என்றேன். “ஒருநாள் சாப்பிட்டா என்னா .... ஒன்ணும் செய்யாது...மாமாவுக்கு கொடு..”.இது மனைவி.

ஆம்ப்ளேட் வந்தது.. மிகவும் கனமாக ஊத்தப்பம் போன்று இருந்தது. அதில் உள்ளி,மிளகுடன் தக்காளித்துண்டுகளும் இருந்தன. சாப்பிட்டேன். வித்தியாசமான ருசியாய் நல்லா இருக்கே.... வேறு ஏதாவது இதில் சேர்ந்திருக்கா எனக் கேட்டேன். பாலும் கொஞ்சம் சேத்திருக்கேன் என்றாள்.

இதெல்லாம் எப்படி உனக்கு தெரிஞ்சு ? ...

நான் NET ல பாத்து செய்தேன்...என்றாள்.

சினை இட்லி தெரியுமா எனக் கேட்க தெரியும் என்றாள்....

குவைத்துக்கு வரும்போது டாக்டர் சொன்னது உடம்பைக் குறைத்து எடையும் குறைக்கணும் என. எல்லாம் ஊரில போய் சாப்பட்ட குறைச்சுக்கலாம்...தினம் தினம் வித்தியாசமாக நாக்குக்கு ருசியாகவும் மனசுக்கு இதமாகவும் உணவு கிடைக்கிறது....குவைத்தை விட்டுப் போகவே அதுவும் நாள் நெருங்கும் இந்த வேளையில் மனசுக்கு என்னவோ போல் இருக்கு.பேரன் ஆச்சியுடன் கொஞ்சும் அழகை நான் ரசிக்க....தாத்தா என என்னிடமே ஒட்டிக் கொண்டு இருப்பதை அவள் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்க...ஊருக்குப் போய்த்தான் தீரணுமா?

தினேஷும் நானும் வெளியே போய் வீட்டினுள் வரும்போது சர்ணேஷ் வேகமாக ஊர்ந்து எங்களை நோக்கி வருவான்....மகனை எடுக்க தினேஷ் குனிந்து கை நீட்டுவான்.ஆனால் பேரனோ அப்பாட்ட போகாமல் வந்து என்னை எடுக்கச் சொல்வான்.அப்பம் நீ தாத்தா ஆச்சிக் கூட ஊருக்குப் போ எனச் செள்ளக் கோபத்தில் சொல்லி மகிழ்வான் தினேஷ்.

நான் என் பிள்ளைகளை எடுத்துக் கொஞ்சினதை விட என் பேரன்களிடம் கொஞ்சியதுதான் கூடுதல். ரத்னேஷ், புவனேஷ், சர்னேஷ்......இவர்கள் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால் எங்கள் ஓய்வு காலம் பிரயாணத்திலும் அவர்களுடன் கொஞ்சுவதிலும் கழிகிறது. ஆண்டவன் இதை விட வேறென்ன தரவேண்டும்..... நிம்மதி எங்கும் கிடைக்கும் பேரன்கள் இருந்தால்.

No comments:

Post a Comment