Thursday, October 27, 2011

சுத்தம் சோறு போடுமா....

புத்தேரி பிள்ளை தந்த நாஞ்சில்நாடன் எழுதிய ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ படித்துக் கொண்டிருந்தேன்.நாவல் என எண்ணிப் படிக்க ஆரம்பித்தேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தலைப்பில் ஓவியர் ஜீவா எழுதிய முன்னுரை இது நாவல் இல்லை கட்டுரை என அறிவித்தது.படித்த பல முன்னுரைகளில் இது எனக்குப் பிடித்தது. “ நீண்ட பயணங்களின் போது மூத்திரம் பெய்ய பெண்கள் படும் கஷ்டத்தை எந்தப் பெண்ணியவாதியாவது வெளிப்படுத்தியிருக்கிறாரா தெரியவில்லை.பெரும் பயணியான நாஞ்சிலுக்குத்தான் ‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ எனக் கூவத் தோன்றியுள்ளது.” இது ஜீவாவின் வரிகள்

பெண்கள் வேலைக்குப் போகும் இடங்களில் இடையில் ஒருமுறையேனும் மூத்திரம் பெய்ய வசதியில்லை.நிறையப் பெண்கள் வெளியே போய் மீண்டும் வீடுவந்து சேரும் வரை மூத்திரம் பெய்வதில்லை.....துர்நாற்றமற்ற கக்கூஸ் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.
கோடிக்கணக்கில் வியாபாரமாகும் நிறுவனங்களில் இருக்கும் கழிப்பறைகளை எட்டிப் பார்த்தால் உண்ட உணவும் குடலும் கூட வெளிச்சாடிவிடும். ஆசிரியரின் ஆதங்கம் இது......

சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காதே.

குவைத்தில் உள்ள எல்லாக் கடைகளிலும் கழிப்பறைகள் மிக மிக அழகாக இருக்கும்.கைகளைத் துடைக்க tissue பேப்பர் அல்லது ஈரமான கைகள் உலர heater வசதி
இருக்கிறது.சில கீர்த்தி வாய்ந்த கடைகளில் உள்ள toilet-ல் தானாகவே இயங்கி தண்ணீர் பாய்ந்து சுத்தம் செய்து விடுகிறது. heater-ன் அருகே ஈரமான கைகளைக் கொண்டு போன உடன் வெப்பக்காற்று தானாகவே வந்து கைகளை உலர வைக்கிறது.

காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சிக்காக நீண்ட நெடும் நடை பாதை FAHAHEEL கடற்கரையில் உள்ளது. அங்கே ஒரு இடத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித் தனி வெவ்வேறு கட்டிடத்தில் toilet உள்ளன.அதனை சுத்தமாகவே வைத்திருக்கிறார்கள்.

சினிமா தியேட்டர்களில் toilet நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு சுத்தமாக இருக்கிறது.

கிராமங்களில் கக்கூஸ் வசதியே கிடையாது....இருட்டானதும் பெண்கள் ஒதுங்கும் இடத்துக்கு அதாவது சாலை ஓரங்களில் அவர்கள் இருப்பதால் அந்தச் சாலை வழியாக ஆண்கள் போக மாட்டார்கள்.போகவும் கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.வசதி உள்ளவர்கள் சிமெண்டில் பீங்கான் போல செய்து கக்கூஸ் அமைத்திருப்பார்கள்....இலவசமாக அரசு பீங்கான் கொடுத்தது.....யாரும் அதிகமாக பயன்படுத்தியதாகத் தெரியவில்லை

காலங்கள் மாற மாற வசதிகள் பெருகினாலும் நவீன கழிப்பறைகள் எல்லார் வீட்டிலும் இல்லாத நிலைதான்.

எங்க வீட்டில் களத்தில் தென் கிழக்கு மூலையில் கக்கூஸ் இருந்தது.அதன் கிழக்குப் பக்கம் ரோடும் ஆறும்... ராத்திரியானால் அங்கு போக பயமாய் இருக்கும்...
என்னுடைய ரூம் மாடி. அது களத்தில் வீட்டின் பக்கத்தில் மேற்குப் பக்கம் இருந்தது.அதில் கக்கூஸ் கட்ட அப்பா சம்மதிக்கவில்லை....எனக்கு வேலை கிடைத்து வேலைக்குப் போகும் நான் படும் அவதியைப் பாத்த அப்பா கக்கூஸ் மாடியிலேயே கட்டித் தந்தார்.எங்க ஊரில் உள்ள முதல் toilet attached room என்னுடையதே.

இந்த நவீன உலகில் இன்றும் எடுப்பு கக்கூஸ் இருக்கும் வீடுகள் உள்ள ஊர் ஒன்று இருக்கிறது........திருநெல்வேலி.

No comments:

Post a Comment