Friday, June 15, 2012

கவிமணியின் கடைசிக் கவிதை

இன்று மாலையில் திரு குமாரசாமி அவர்களை சந்திக்கும்போது அவர் கையில் கிழிந்தும் நைந்தும் போன மஞ்சள் நிற பேப்பர் ஒன்று கையில் இருந்ததைக் கண்டேன் .
இது என்னது என நான் கேட்கும் முன்னமே காந்திநாதன் இது ஒரு பத்திரிகை ....பழைய பத்திரிகை என்று கூறவே அதனை நான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் .
அந்த பத்திரிகை ஆரம்பித்த ஆண்டு 1874 என்று அறிந்து கொண்டேன் .
இந்தியாவில் வெளியான ஆறாவது தமிழ் பத்திரிகை .
ஆசிரியர் : D .C .ஜோசப் .
திருவிதாங்கூர் கொச்சி யில் வெளியான முதல் தமிழ் தினசரி .
நாகர்கோவிலில் இருந்து வெளியான பத்திரிகை .

பத்திரிகையின் பெயர் தியாக நாடு. முதல் பக்கத்தில் பத்திரிகையின் பெயரான
தியாக நாடு வின் இரு பக்கத்திலும் தாமரை மலர் இடம் பெற்றிருந்தது .

நான் பார்த்த பத்திரிகை வெளியான தேதி 15-8-1953.
சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகையில் " சுதந்திரம் " என்ற தலைப்பில்
கவிதை ஒன்று இருந்தது.

                                                          வெண்பா  

நாடும் நகரும் நகர்ப்புறமும் நன்றாக
வீடும் குடியும் விளக்குமுறப்- பாடுபட்டுப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்ப்பதுவே
கற்ற பெரியோர் கடன் ....
                                                         வேறு   


ஆக்கம்  வேண்டுமெனில் - நன்மை 
       அடைய வேண்டுமெனில் 
ஊக்கம் வேண்டுமப்பா -ஓயா
  துழைக்க வேண்டுமப்பா  .


நெற்றியின் வியர்வை -நிதமும் 
    நிலத்தில் வீழ்ந்திடிலே 
வற்றி வாடாமல் -சுதந்திரம் 
  வளர்ந்து வருமப்பா . 


இதனை எழுதியது யார் தெரியுமா? கவிமணி தேசிக விநாயகன் என அச்சாயிருந்தது .  ஆம் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளைப் பாட்டா தான் .
இதுதான் அவர் எழுதிய கடைசிக் கவிதை என அந்தப் பத்திரிகையை 
வைத்திருந்த குமாரசுவாமி அவர்கள் சொன்னார். மேலும் அவர் சொன்னார்,:" படுக்கையில் இருந்த கவிமணி சொல்ல குமாரசாமி  எழுதினாராம். 
இந்தத் தகவலைத் தந்த தினத்தந்தி குமாரசாமிக்கு என் அன்பு கலந்த நன்றி.
கவிமணி ஆண்டு:1876-1954.
பிறந்த நாள் :27-7-1876
மணி ஒலி நின்ற நாள்:26-9-1954  



No comments:

Post a Comment