Sunday, June 17, 2012

திருமணச் சடங்கு


ஜனுவரி மாதம் 8-ஆம் தேதி யன்று காலையில் திருநெல்வேலிக்கு ராமகிருஷ்ணனுடன் போவதற்காக அவரது வீட்டுக்கு ஜெயராமன் கார் ஓட்ட நான் போனேன். அன்று ம.சு.பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ராமகிருஷ்ணனும் அதனைக் காண்பதற்காக நானும் போனோம். மகனை வழி அனுப்புவதற்காக அவர் அம்மையும் அப்பாவும் வெளியே வந்தார்கள். எனது பள்ளி ஆசிரியரவர்.
நான் எனது ஆசிரியரிடம்,” நீங்க இருவரும் வரலாமே…..” கேட்டேன்.
“எனக்கு கண் சரியாகத் தெரியாது…. நடப்பதற்கும் சற்று சிரமம்…..” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள் அருகில் நின்ற ராமகிருஷ்ணனின் அம்மை, ”நீங்க போறீங்கள்ளா……. அது நாங்க போறது மாதிரிதான்…” இந்த சொல் என்ன மந்திரச் சொல்லா…… அது என்னை என்னவோ செய்தது…உடம்பினுள்ளேயே ஒரு இரசாயன மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு.
”திருமணச் சடங்கு சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. அதனை அறிய ஒருநாள் நான் வருவேன் “ என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்………..
சொன்னபடி பல தடவை போக முயன்றும் தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 15-06-2012 வருவேன் என்று சொல்லிவிட்டுதான் போனேன். ஆனால் ராமகிருஷ்ணன் வீட்டில் இல்லை. எனக்கு வீட்டிற்குள் போய் சாரைப் பாக்கவா அல்லது திரும்பவா என யோசித்துக் கொண்டிருக்கும்போதே சார் என்னை உள்ளே அழைத்து விட்டார்.
என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
இப்பொழுது பெண்ணைப் பெற்றவர்கள் வரன் தேடி அலைகிறார்கள். முன்காலங்களில் அப்படி இல்லை. பையனின் பெற்றோர்கள் தான் பெண் பார்க்க பெண் வீட்டுக்குப் போய் தன் மகன்களுக்கு பெண் கேட்பார்கள்.
பையன்கள் வீட்டிலும் திருமணம் நடப்பதுண்டு…… பையன் வீட்டார் பொன்னாபரணங்கள் செய்து பெண்ணுக்கு கொடுப்பதுண்டு.
திருமண தினத்தன்று மாப்பிள்ளை பெண் கையில் மஞ்சள் கயிறு கட்டுகிறார்களே……அது ஏன்? மாப்பிள்ளை யார்? பொண்ணு யார் என அடையாளம் காட்டுவதற்காகவா…?
அவ்வாறு கட்டுவதை காப்புக் கட்டு என்பார்கள்….. காப்பு என்பது பாதுகாப்பு…… துர் ஆவிகளும் எந்த விதமான ஏவல்களும் புதுமணத்தம்பதிகளை தாக்காமல் பாதுகாக்க, பாதுகாப்புக்கு அவர்கள் கையில் காப்பு கட்டுவார்கள். அது இன்றும் நடைமுறையில் இருக்கிறதே…….
நாலாம் நீர்ச் சடங்கு பற்றி கேட்டேன்.  ஏழு நாட்கள் திருமண விழா முந்நாட்களில் நடக்கும் .நான்காம் நாள் நடக்கும் ஒரு சிறிய சடங்கு தான். சுத்தமாக இருக்கவே குளிக்கும் சடங்கு அது. பின் நலுங்கு விளையாட்டு……
பப்படம் பொடித்து தலையில் போடுவது திருஷ்டி போக என்கிறார்கள்.
காலில் தண்டை போடுவது பற்றியும் சொன்னார்.
தண்டை என்பது தடை என்ற சொல்லில் இருந்து வந்தது…. பூண்டு…. பூடு ஆனது போல..
பெண்ணுக்கு வெளியே போகத்தடை….. நடந்துவரும் பெண்ணின் காலில் தண்டை இருந்தால் எதிரே ஆண்கள் வரத் தடை …….ஒதுங்கி நிற்க வேண்டும்……
ஏழாம் நீர்ச் சடங்கு என்றால் என்ன..? சரியாக தகவல் இல்லை. ஏழு நாட்கள் திருமணம் நடக்கும் அல்லவா ! அந்த ஏழாம் நாள் திருமணநாளில் கயிற்றில் கட்டிய பொன் தாலியை தங்கச் செயினில் கொருப்பார்கள். மஞ்சள் நீர் விளையாட்டு என ஒன்று உண்டு. அத்தான் மைத்துனன் மீதும் கொழுந்தி மீதும் மஞ்சள் நீரை விரட்டி விரட்டி கொட்டுவார்கள். அதெல்லாம் இப்போ இல்லை
 அதன் பிறகு வந்திருந்த விருந்தினர்கள் தத்தமது வீட்டுக்கு கிளம்புவார்களாம்.

No comments:

Post a Comment