Friday, June 22, 2012

நான் கட்ட சைக்கிளில் ஓட்டிப் படித்த அந்த நாள்

சின்ன வயதில் என்னைத் தவிர என் சக தோழர்கள் எல்லோருக்குமே சைக்கிள் ஓட்டத்தெரியும்.எங்கள் ஊரில் இரண்டு சைக்கிள் கடைகள் உண்டு. ஒரு மணிக்கூருக்கு ஒரணா. இரவு முழுவதும் வண்டி வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கு வாடகை எட்டணா.அந்த சைக்கிள் கட்ட சைக்கிள். சிறுவர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டிருக்கும்....

சைக்கிள் ஓட்ட படிக்கவும் அதனை எடுப்பதுண்டு.  சைக்கிள் ஓட்டப்படிப்பவன் இன்னொருவன் துணை கொண்டு சைக்கிள் படிப்பதைப் பார்த்திருக்கிறேன்... புதியதாய் ஓட்டும் போது சமநிலை தவறும். முதுகு இடமும் வடமும் வளைந்து வளைந்து வண்டி கீழே விழுவது போன்ற நிலையில் வண்டி உருண்டோடும்..... சைக்கிள் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான் பின்னால் ஓடி ஓடிச் செல்பவன்..... முதுகு வளைவதைப் பார்த்ததும் பின்னால் வருவானே ஒருவன்.....அவன் முதுகில் ஓங்கி அடிப்பான்.  விதியே என்று அடிபட்டவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பான்...... சில சமயத்தில் அடி பலமானால் சண்டை மூழ்வதும் உண்டு.......

இறக்கத்தில் வண்டி வேக வேக மாய் உருண்டோடும்போது கைகள் பிரேக்கை பிடிக்காமலும் கால்கள் பெடல்மீது இல்லாமலும் தாறுமாறாய் ஓடி கீழே விழுந்து உடம்பில் பல இடங்களில் அடிபட்டு இரத்தக் காயங்களுடன் வீட்டிற்குப்போய் அவஸ்தைப் பட்ட தோழர்கள் பலர் உண்டு. சொன்னால் அடி கிடைக்கும் . காலுக்கு மருந்து போடும்போது அம்மையோ அப்பாவோ பார்த்து விட்டால் அவ்வளவுதான் . ஏற்கனவே உள்ள வேதனையுடன் அவர்கள் தரும் வேதனையும் கூடும். ...

எனக்கும் சைக்கிள் படிக்க ஆசை...... அம்மயிடம் பொய் சொல்லி ஒரணா வாங்கி சைக்கிள் கடையில் போய் ஒரு மணிக்கூருக்கு சைக்கிள் வாடகைக்கு கேட்டேன். அவன் தர மறுத்தான். தந்தால் எனது அப்பா அவனைத் திட்டி விடுவார் என்ற பயமே காரணம். சைக்கிள் படிக்கணுமே என்ன செய்ய......

இன்னொரு பையனிடம் அணாவைக் கொடுத்து சைக்கிள் வாங்கி வரச் சொல்லி அதில் நான் சைக்கிள் ஓட்டிப் படித்தேன். என் முதுகும் வளைந்தது....அடி விழுமோ என நான் நினைத்தேன்..... ஆனால் அடி விழவில்லை. அன்பாக சொல்லித்தந்தான்...... ஓரளவு படித்துவிட்டேன்.

ஒருவன் சொன்னான் .பௌர்ணமி இரவில் ஒருநாள் வாடகைக்கு எடுத்து படி....என்றான்.
அம்மையிடம் கேட்டேன். சம்மதிக்கவில்லை..... கீழ விழுந்து கைய கால முறிச்சிராதே என்று சொல்லி தடுத்தாள்...... கோபம் எனக்கும் வந்தது. நேரே என் அப்பாட்ட போய் எனக்கு சைக்கிள் படிக்கணும். சைக்கிள் வாடகைக்கு எடுக்க பைசா எட்டு அணா கேட்டேன்.
உனக்கு சைக்கிள் தானே வேணும்...... நான் உனக்கு சைக்கிள் சொல்லித்தர  ஒரு ஆளையும் ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொன்னா.

இரவு சைக்கிள் எங்க வீட்டுக் களத்துக்கே வந்தது. சைக்கிள் ஓட்டிப் படித்தேன்....கண் துஞ்சாமல் பயிற்சி எடுத்தேன். வெளியே ஓட்டவில்லை. களத்தினுள்ளேயே ஓட்டினேன். நான் தூங்கப் போகும்போதுதான் எனது அப்பாவும் தூங்குவதற்காக உள்ளே சென்றார்.

எல்லா பையன்களும் சேர்ந்து தடிக்காரங்கோணம் சைக்கிளில் பயணம் செய்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

எனது சின்னப்பாவிடம் Humber சைக்கிள் ஒன்று உண்டு. அதனை யாரும் தொடக்கூடமுடியாது... ஆனால் என்னிடம் ஒட்டும்படி பலதடவை சைக்கிளை தந்தது உண்டு.

கல்லூரியில் வேலைகிடைத்த உடன் ரேலி சைக்கிள் வாங்கினேன்.
காமராஜர் மறைந்த நாளன்று நாகர்கோவிலில் இருந்து சைக்கிளிலேயே கடுக்கரைக்கு நானும் சாஸ்தாங்குட்டியும் போனோம். காரணம் அன்று பஸ் போவது நின்று விட்டது.




No comments:

Post a Comment