Sunday, September 11, 2011

மதிக்கப்பட வேண்டிய ஒரு மனிதர்

கடுக்கரைக்குப் போய் வடக்கு வாச்செல்லி அம்மன் கோயில் திருப்பணியைப் பார்க்க வேண்டுமே குவைத்துக்குப் போவதற்கு முன்னால் என்ற என் எண்ணம் ஏனோ தள்ளிப் போய் கொண்டேஇருந்தது.

4-ஆம் தேதிப் போகலாம் என்று நினைத்து கொண்டிருந்த காலையில் ஒரு பெரியவரின் மறைந்த தகவல் வந்தது.அந்தப் பெரியவர் ஒரு ஓய்வு பெற்ற பள்ளிக்கூட ஆசிரியர். வள்ளியூர்,நாங்குனேரி பகுதியில் வேலை பார்த்தவர்.அவர் அந்தப் பகுதி மக்களின் மதிப்பை அதிகம் பெற்ற ஒரு நல்லவர். ராஜாக்கமங்கலம் தான் அவரது சொந்த ஊர்.

அவர் ஒய்வு பெற்று வீட்டில் ஓய்வாக இருந்த நாளில் அவர் வீட்டின் முன்னே ஒரு கார் வந்து நின்றது. காரில் வந்தவர் பெரும் செல்வந்தர்.சென்னையில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவருக்கு சினிமா தியேட்டரும் உண்டு.அவரது பிறந்த ஊர் நாங்குநேரிப் பக்கம் உள்ள ஒரு சின்ன கிராமம். அவர் அந்தப்பெரியவரின் முன்னே வந்து வணங்கினார்.

“சார்! நான் பள்ளியில் படித்த உங்கள் மாணவன்.என் பெயர்......”

‘நல்ல ஞாபகம் இருக்குப்பா.....நல்லா இருக்கியா? .உன்ன என்னால எப்படி மறக்க முடியும்’

“கணக்குப் பாடத்தில் நான் பாசானது உங்களால் தான்.என் மண்டையில் கணக்கு ஒண்ணுதான் ஏறாது”

‘என்ன விசயமா என்னைப் பாக்க வந்திருக்க....’

“நான் எங்க சொந்த ஊரில் கல்லூரிக் கட்டி நடத்திவருகிறேன்.நான் சென்னையில் இருந்துகொண்டு கல்லூரியை நல்ல முறையில் நடத்துவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நான் தான் கல்லூரிச் செயலாளர்.நீங்கள் கல்லூரிச் செயலாளராக இருந்து எனக்குப் பதில் எனது பொறுப்புகள் அனைத்தையும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் சார்.எங்கள் ஊரில்
உள்ளப் பள்ளிக்கூடத்தை நல்லமுறையில் நடந்திட காரணமே நீங்கள் அங்கே H.M -ஆக இருந்ததுதான்.”

வற்புறுத்தல் காரணமாக சம்மதித்த அவர்,‘ வருகிறேன்.எந்தப் பணப்பொறுப்பையும் எடுக்க மாட்டேன்.....ஆனால் இனிமேல் என்னால் அங்கெல்லாம் வந்து தங்க முடியாதே...’

“கல்லூரியில் இருந்து கார் தினமும் உங்க வீட்டுக்கே வந்து உங்கள கூட்டிற்றுப் போயிரும். பணப்பொறுப்புக்கு வேற ஆள போட்ரலாம் சார்”

கல்லூரிச் செயலாளர் ஆனார் .அவர் கல்லூரி செயலராக இருந்தபோது என்னை கணிதப் பாடத்துக்கு லெக்சர் தேர்வுக்கு அழைத்தார்.நான் அந்தத் தேர்வு நடத்த அவர் போகும்போது என்னை அவருடன் கூட்டிக் கொண்டு போனார்.காரில் போகும்போதுதான் இந்த விசயத்தை என்னிடன் சொன்னார்.

நல்ல மனிதரின் மறைவு வருத்தமாக இருந்தது.ஆகவே கடுக்கரைக்குப் போகும் எண்னத்தை விட்டுவிட்டு நான் அவரது உடல் இருந்த அவளது மூத்தமகளின் வீட்டுக்கு என் மனைவியையும் அழைத்துக் கொண்டு போனேன்.அந்த வீட்டின் முன்னே இருந்த கூட்டமே அவரது பெருமையயும் பண்பையும் பறை சாற்றிக்கொண்டிருந்தது.

என்னை அந்த இடத்தில் சற்றும் எதிர்பார்க்காமல் பார்த்த என் கல்லூரி நண்பர், “பொன்னப்பா..நீ எப்படி இங்க வந்த....உனக்கு அவரத்தெரியுமா?”கேட்டான்

நான் விசயத்தைக் கூறினேன். அவன் அவரது சொந்தக்காரன்.

அவன் மறைந்தவரைப் பற்றி பெருமையாக சில விசயங்களை என்னிடம் கூறினான்.

அதனைக் கேட்ட எனக்கு பெரியவரின் மீதுள்ள மதிப்பு மேலும் அதிகமானது.

அந்தப் பெரியவருக்கு இரண்டு சகோதரர்கள்.அதில் அண்ணன் காலமான பின்பு  பிறந்தஅண்ணனின் பெண் குழந்தையை தனது மூத்த மகள் போல் வளர்த்து டாக்டருக்குப் படிக்க வைத்தார்.தனது 3 மகளையும் டாக்டராக்கினார்.தம்பியும் ஒரு டாக்டர். தம்பியின் திடீர் மறைவு  மேலும் சுமையைக் கூட்டியது.சற்றும் மனம் தளராமல் தம்பியின் மகனுக்கும் தந்தையாக இருந்து ஒரு மகனுக்குச்செய்ய வேண்டியவற்றை மிகச் சரியாகச் செய்தார்.அவனுக்கு கடுக்கரையில் இருந்து ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து ஒரு படித்த பெண்ணைப் பார்த்துப் பேசி திருமணமும் நடத்திவைத்தார்.அந்த மகன்தான் தந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளையும் செய்தான்.இறந்தவரின் வயது78.அவரது பெயர் ஆறுமுகம்பிள்ளை.

தோன்றினால் புகழோடு தோன்றுக என்ற வாக்கினை மெய்ப்பித்தவர். .தியாகத்தின் திரு உருவமே அவர் தான் என்று கூறும்படி வாழ்ந்த அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இதனை வாசிப்பவர்கள் எல்லோருமே வேண்டி வணங்குவோம்.

மதிக்கப்பட வேண்டிய ஒரு மனிதர்.......இல்லையில்லை......மாமனிதர் அவர்.

No comments:

Post a Comment